Pages

Monday, April 30, 2018

மே 1: உழைப்பும் இறைவனின் அழைப்பும்

தூய வளனார் நினைவு நாள் 

இன்றைய வாசகங்கள்: தொ நூ 1:26 - 2:3; மத் 13: 54-58


உழைப்பு, வேலை, பணி... இவை அனைவரின் வாழ்விலும் தவறாத ஒரு அங்கம். உழைப்பு என்பது கிறிஸ்தவ வாழ்விலே வெறும் செய்யும் வேலை என்பதை தாண்டி, ஆழமான ஒரு பொருளை பெற்றுள்ளது. இந்த புரிதலை ஆழப்படுத்தவே தூய வளனாரை நமக்கு முன் மாதிரியாக, உழைப்பாளர்களின் பாதுகாவலராக இன்று நினைவுப்படுத்துகிறது திருச்சபை. 

நாம் செய்யும் எந்த ஒரு பணியும் மூன்று பரிமானங்களை கொண்டிருக்க வேண்டும்...

முதலாவது, தன்னடையாளத்தின் வெளிப்பாடு : என் உழைப்பு, என்னையே நான் அடுத்தவருக்கும் அனைவருக்கும் வெளிப்படுத்தும் வழியாகும். ஒரு வேலையை நான் செய்து முடிக்கும் போது என்னையே நான் அதில் காணவேண்டும். ஒரு சிலர் செய்த வேலைகளை யார் செய்தது என்பதை அவர்கள் சொல்லாமலேயே தெரிந்துகொள்ளலாம். அவ்வாறே, இறைவன் இன்று முதல் வாசகத்திலே...தான் செய்து முடித்த அனைத்தும் நல்லது எனக்கண்டார் என்று நாம் படிக்கிறோம். அவர் தன்னையே தன் படைப்பில் கண்டார். 

இரண்டாவது, அடுத்தவரின் நலன் பேணுவது: நான் செய்யும் ஒவ்வொரு வேலையும் அடுத்தவரின், மானுடத்தின் நன்மையை மனதிற்கொண்டு செய்யப்பட வேண்டும். உழைப்பில் ஈடுபடும் நாம் நமது நலனுக்காக மட்டுமல்ல, மனிதத்தின் நன்மைக்காக, இறைவனின் அனைத்து பிள்ளைகளின் நன்மைக்காகவும் செயகிறோம், என்று உணர்ந்து ஈடுபடவேண்டும்.

மூன்றாவதாக, கடவுளின் கரமாதல்: நாம் செய்யும் பணியால், நமது பயிற்சியால், நமது மதி நுட்பத்தால், நாம் இறைவனின் கரங்களாய் மாறும் வழியே நமது உழைப்பு. நம் ஒவ்வொருவரையும் படைத்த இறைவன், நமக்கென ஒரு அழைப்பை கொடுத்துள்ளார்...அந்த அழைப்பின் இணைப்பிரியா வெளிப்பாடு நம் உழைப்பு! 

நாம் செய்யும் வேலைகளை இந்த மனநிலையோடு செய்கிறோமா என்று இன்று சிந்திப்போம்: நமது சுயவெளிப்பாடாக, மனிதத்தின் நன்மையை பேணுவதற்காக, கடவுளின் கரங்களாய் நாம் உருவாவதற்காக நமது பணிகள் நமக்கு உதவுகின்றனவா?

இவற்றில்... எங்காவது பணம், விலை, மதிப்பு என்று ஏதாவது நாம் பேசியுள்ளோமா? ஆனால்  நடைமுறையில், வேலை என்றாலே பணத்தோடும், அதன் விலைமதிப்போடும் மட்டுமே இணைத்து சிந்திப்பது ஏன்? எங்கேயோ, ஏதோ தவறான பாதையில் சென்றுவிட்டது போன்று தோன்றுகிறதா?

No comments:

Post a Comment