Pages

Wednesday, October 10, 2018

இறையாட்சிக்கான இதயம்

அக்டோபர் 10, 2018: கலா 2:1-2, 7-14; லூக் 11:1-4

இன்றும் தொடர்ந்து பவுலடிகளார் திருச்சபையின் அப்போஸ்தலராக உருவான தொடக்க நாள்களை குறித்து பேசுகிறார். இன்று அவர் கூறும் நிகழ்வும் நற்செய்தியில் கிறிஸ்து கற்று தரும் பாடமும் இணைந்து, இறையாட்சிக்குரிய மனநிலை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டுமென நமக்கு விளக்குகின்றன. இவற்றில் மூன்று மனநிலைகளை மட்டும் அடிக்கோடிடுவோம். 

தனிப்பட்ட ஒருமைத்தன்மை அல்லது நாணயம் எனப்படும் குணமே பவுலடிகளாருக்கு பெரும் ஆற்றலை தந்தது. இன்று தனது திருமுகத்தில் எவ்வாறு பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் இந்த ஒருமைத்தன்மை இல்லாமைக்கு கடிந்துகொள்ள நேர்ந்தது என்பதை நமக்கு விளக்குகிறார். தாங்கள் போதிப்பது ஒன்றாகவும் வாழ்வது வேறாகவும் இருந்ததை அவர்களை உணர வைக்கிறார் பவுலடிகளார். நான் பேசுவதும், நம்புவதும், வாழ்வதும் ஒருங்கமைந்த நிலையே ஒருமைத்தன்மையாகும்... இந்த தன்மை இல்லாமல் இறைவார்த்தையை வல்லமையோடு யாராலும் அறிவிக்கமுடியாது.

பயமரியாத்தன்மை என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையிலிருந்து பிறக்கின்றது. இறைவன் எனது தந்தை, தாய், என்னை அளவற்ற அன்போடு நேசிக்கிறவர் என்ற ஆழமான நம்பிக்கை என்னில் இருப்பின் இதைக்குறித்து பயமறியாது நிலை என்னில் பிறந்துவிடும். இறையாட்சியை காட்டிலும் முக்கியமானது ஏதும் இல்லை என்ற எண்ணம் என்னிலே வந்துவிட்டால் அதற்காக நான் உழைப்பதை எதுவும் தடுக்க முடியாது என்பதே உண்மை. 

மன்னிப்போடு கூடிய திருத்தங்கள் நல்ல உறவுக்கான அடையாளங்களாகும். உறவை பாதுகாத்துக்கொள்ள ஒருவர் செய்யும் தவறுகளையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது சரியல்ல. அதே சமயம் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் அடுத்தவரை மதிக்காது, அவரை தீர்ப்பிட்டு, அவர் பெயரை களங்கப்படுத்தி, அவர் மனதை ஆழமாய் காயப்படுத்துவதும் இறையாட்சிக்குரிய மனநிலை அல்ல. திருத்தினாலும் தீர்ப்பிடாது, தவறுகளை சுட்டிக்காட்டினாலும் மன்னிக்க தயாராய் இருக்கும் மனநிலையே இறையாட்சிக்கு உரியது! 

இந்த குணங்கள் நிறைந்தவர்களே இறையாட்சிக்குரிய இதயங்கள் என்று இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது... நாம் இந்த வரையறைக்குள் இடம் பெருமவோமா?

No comments:

Post a Comment