Pages

Tuesday, October 2, 2018

உண்மையறிந்தால், நீ உண்மையறிந்தால்...

அக்டோபர் 3, 2018: யோபு 9:1-12,14-16; லூக் 9: 57-62 


இறைவனின் வழிகளோ வியப்பானவை, நமது புரிதலுக்கு அப்பாற்பட்டவை. ஆனால் நம் வாழ்வில் நமக்கு நேரக்கூடியவற்றில் சிறந்தவை அவையே! தன் வாழ்வின் கண்ணோட்டத்தின் வழியாய் யோபு நமக்கு இன்று இந்த அழகானதொரு பாடத்தை தருகின்றார். இறைவனின் சித்தத்திற்கும் அவரது திட்டத்திற்கும் சரணாவதை காட்டிலும் மேலானதொரு வாழ்வியல் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை தனது எடுத்துக்காட்டின் வழியாய் நமக்கு எண்பிக்கிறார். 

நாம் ஒன்று நினைக்க இறைவன் ஒன்று நினைக்கிறார், என்று நமது வழக்கத்தில் சொல்வதுண்டு...ஆனால், இது எவ்வளவு தவறானது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? நமது வாழ்வு குறித்தோ நமது இலக்குகள் குறித்தோ சிந்திக்க நாம் யார்? நாம் நினைத்தா இவ்வுலகிற்கு வந்து பிறந்தோம்? நாம் முடிவு செய்தா இவ்வுலகை விட்டு செல்லவிருக்கிறோம்? நம்மை படைத்தவருக்கு தெரிவதை காட்டிலுமா நமக்கு நம்மையே தெரிந்துவிட போகிறது? இது உண்மையெனில், அவரது சித்தமும் திட்டமும் அல்லவா உண்மை நிறைவை நமக்கு தர இயலும்! இதை நாம் உணர்ந்துவிட்டால் நமது வாழ்க்கை முறையே மாறிவிடும், தெளிவு பெறும்.  

இதை அறியாதபோதே, நாம் அனைத்தும் தெரிந்தவர்கள் போல இறைவனுக்கு அறிவுரை கூற விழைகிறோம், அவரது திட்டங்களில் சிலவற்றை மாற்றி அமைக்க அவரிடமே ஆலோசனை தருகிறோம்... நமக்கு எது நன்மை என்று அவருக்கு தெரியாதா? அவரது சித்தமும் திட்டமுமே நமது வாழ்வில் நடக்க கூடியவற்றில் சிறந்தவையாகும்.

இன்றைய நற்செய்தியில் நாம் காண்பதும் இதுவே! பின்தொடர விரும்பும் ஒருவரை வேண்டாம் என்கிறார், தாமதிக்கும் ஒருவரை உடனே பின்செல் என்கிறார்... காரணம் என்ன - அது அவருக்கு மட்டுமே தெரியும். நமக்கென ஒரு திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார், அதன் படி நமது வாழ்வு அமையும் போது அது நிறைவு காண்கிறது, இல்லையெனில் ஏதோ ஒன்று தொக்கியே நிற்கின்றது. இந்த உண்மையறிந்தால், நீ இந்த உண்மையை அறிந்துவிட்டாயானால், உன் மனம் தெளிவு பெறும், உன் உள்ளம் அமைதி பெறும், உன் வாழ்வு நிறைவு பெறும்!

No comments:

Post a Comment