Sunday, August 12, 2018

மனிதமும் மாட்சியும்

ஆகஸ்ட் 13, 2018: எசேக் 1:2-5,24-28; மத் 17:22-27


இறைவனின் மாட்சிமை நம் கண்கொண்டு காண இயலாதது என்பதை எசேக்கியேல் அழகாய் விளக்குகிறார். அந்த இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாமும் அதே மாட்சியை தங்கியவர்கள் என்பதை நாம் ஏன்  அவ்வப்போது மறந்துவிடுகிறோம்? இறைவனில் இணைந்து இருக்கும் வரை நமது மாட்சியும், உலகம் வியக்க மின்னுகிறது. ஆனால் இறைவனை விட்டு விலகி சிந்தித்தால் அதே மாட்சி, கர்வமாய், தற்புகழ்ச்சியாய், திமிராய், அரக்கத்தனமாய் அழிவுக்கு வழிவகுக்கிறது. இறைவனோடு இணைந்து உள்ளவரை இந்த மாட்சியே நம் அன்றாட வாழ்வின் துன்பங்களையும் துயரங்களையும் சோதனைகளையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்கு அளவில்லாது தருகிறது. 

நற்செய்தியிலே கிறிஸ்து இந்த மாட்சியை தக்கவைத்துக்கொள்ள ஒரு வழியை நமக்கு கற்பிக்கிறார். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் இறைவனின் கண்ணோட்டத்திலிருந்து காண கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் கிறிஸ்து. அது வெறும் வரி செலுத்தும் ஒரு செயலாக இருந்தாலும் அதை எப்படி இறைவனின் கண்ணோட்டத்தில் காண்பது என்பதை நமக்கு எடுத்துக்காட்டாய் வழங்குகிறார். 

வாழ்வின் சாதாரண நிகழ்வுகளையும் கூட இறைவனின் கண்ணோட்டத்தில் கண்டு புரிந்துகொள்ளும் தன்மையை நமக்குள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது நன்மையோ தீமையோ, இன்பமோ துன்பமோ, வெற்றியோ தோல்வியோ, நிறைவோ குறைவோ எல்லாவற்றிலும் இறைவனின் மாட்சி மிளிர்வதை நம்மால் உணர முடியும், அதே மாட்சி மனிதர்களாகிய நம்மிடமும் இருப்பதை நம்மால் நம்ப முடியும். இறைவனின் கண்ணோட்டத்தில் வாழ்வை காண்போம், நமக்குள் குடியிருக்கும் இறைவனின் மாட்சியை கண்டுணர்வோம்!

No comments: