Tuesday, February 13, 2018

பிப்ரவரி 13: இன்னுமா உங்களுக்கு புரியவில்லை?

இறைவார்த்தைக்கும் இறையாட்சிக்கும் உட்பட்ட வாழ்வு...



தன் பொறுமையை இழக்கும் இயேசுவை இன்று நாம் சந்திக்கின்றோம். இங்கு  மட்டுமல்ல, வேறு சில இடங்களிலும் கூட இயேசு பொறுமை இழக்கிறார், அதை வெளிகாட்டவும் செய்கிறார். எதற்காக பொறுமை இழக்கிறார் என்பதே நாம் கவனிக்க வேண்டிய உண்மை. தான் நினைத்தது நடக்கவில்லை என்பதாலோ, தான் எண்ணியது கிடைக்கவில்லை என்பதாலோ அல்ல... அது நமது காரணங்கள். இயேசுவின் ஏமாற்றத்திற்கு காரணம் இவ்வளவு நாட்கள் தன்னோடு இருந்தவர்களும், இத்தனை பெரும் காரியங்கள் நிகழ்வதை கண்டவர்களும் கூட இன்னும் இறைவார்த்தைக்கும் இறையரசிற்கும் உட்பட்ட வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளவில்லையே என்பது தான். 

பழக்கம், வழக்கம், பாரம்பரியம், முறை, காலாகாலமாக செய்வது இதுவே என்றெல்லாம் நமக்கே இலக்கணம் கற்பித்துக்கொண்டு நாம் செய்யும் பல  செயல்களும், சிந்திக்கும் பல சிந்தனைகளும், இறைவார்த்தைக்கும் இறையாட்சிக்கும் நேர் எதிராய் இருப்பது நாம் அறிந்ததே. எனினும், அதையே நாம் வலிந்து பிடித்துக்கொண்டிருக்கும் போது நாம் கிறிஸ்துவின் இந்த ஏமாற்றத்திற்கு காரணமாகிறோம். 

இவையே பெரும் சோதனைகளாகும். சோதனைகள் இறைவனிடம் இருந்து வருவதில்லை... இவற்றை நாமாக தான் வருவித்துக்கொள்கிறோம் என்று யாக்கோபு தெளிவாக நமக்கு எடுத்துச்சொல்கிறார். நமது ஆசைகளும், சோதனைகளும், பாவங்களும், அதன் காரணமாய் வரும் இறப்பும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை அல்ல என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ள போகிறோம் என்று கிறிஸ்து நம்மை இன்று வினவுகிறார். 

சிந்திக்காது, இறைவார்த்தையின் அழைப்புக்கு செவிமடுக்காது, இறையாட்சியின் மக்களாய் வாழ முடிவெடுக்காது நாம் வாழ்ந்துகொண்டிருந்தோம் என்றால், வெகு விரைவில் இதே கேள்வி நம்மை நோக்கியும் எழும்: இன்னுமா உங்களுக்கு புரியவில்லை?