Monday, October 8, 2018

செவி கொடு... உணர்ந்திடு... புகழ்ந்திடு

அக்டோபர் 9, 2018: கலா 1:13-24; லூக் 10:38-42

இன்றைய இறைவார்த்தை இறைவனுக்கு செவிமடுக்கும் திறனை முன்னிறுத்துகிறது. சவுல் பவுலான கதை நமக்கு தெறியும், அதில் வெளிப்படும் பவுலடிகளாரின் முதன்மையான திறன், அவர் கடவுளின் குரலுக்கு செவிசாய்த்ததே ஆகும். அவருக்கே உரிய தற்புகழ்ச்சியோடும், இறுக்கமான சிந்தனைகளோடும் இருந்திருந்தால் அவர் இறைவனின் மாபெரும் அப்போஸ்தலராய் உருவாகியே இருக்கமுடியாது என்பது தான் எதார்த்தம். தான் அப்போஸ்தலனாய் உருவானதன் வரலாற்றை கூறும் அவரே அதில் பெரும் பங்கை தான் இறைவனுக்கு செவிகொடுக்க முன்வந்ததற்கே அளிப்பது இந்த ஆழமான உண்மையை நாம் உணர செய்கிறது. 

பெத்தானியாவை சார்ந்த மரியாவும் செவிகொடுப்பதில் நமக்கு மேலுமொரு முன்னோடியாய் தரப்படுகிறார். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமன்றோ உள்ளன என்று பேதுரு கூறியது போல, அந்த வாழ்வு தரும் வார்த்தைகளுக்கே முதல் இடம் கொடுத்து அனைத்தையும் விட்டுவிட தயாராய் இருக்கும் மரியா நாம் நமது உள்ளத்தில் முன்னெடுக்க வேண்டிய மாற்றத்தை நமக்கு குறித்து காட்டுகிறார். 

இவர்கள் அனைவருக்கும், உள்ள முன்னோடிகள் அனைவருக்கும் முத்தாய்ப்பாய் விளங்குபவர் அன்னை மரியாள். இவரை விட இறைவார்த்தைக்கு செவிமடுத்து அதன்படி வாழ முன்வந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. நிகழ்ந்தவை அனைத்தையும் தன் மனதில் நிறுத்தி தியானித்து வந்தாள், என்று நற்செய்தி நமக்கு குறித்துக்காட்டுகிறது. கடந்த ஞாயிறன்று இவ்வன்னையை செபமாலையின் அன்னை என நாம் நினைவு கூர்ந்தோம். செபமாலை என்பது இறைவனுக்கு செவிகொடுக்க மாபெரும் துணையாகும். கபிரியேல் தூதர் மரியன்னைக்கு இறைவார்த்தையை அறிவித்தது முதல் மரியன்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியாய் முடிசூட்டப்பட்டது வரை நாம் செபமாலையில் தியானிக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இறைவனின் திட்டம் மனித வரலாற்றில் எவ்வாறு படிப்படியாய் வெளிப்பட்டது என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. இந்நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் விவிலியத்தில் சான்று தேட முடியாது எனினும், உள்ளத்தின் ஆழத்தில் இவற்றை தியானிக்கும் போது இறைவனின் மீட்பு திட்டம் தொடர்ந்து வெளிப்படுவதை நம்மால் உணரமுடிகிறது. 

நம் வாழ்வில் இன்றும் இறைவனின் திட்டம் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்தி அமைதியில், உள்ளத்தின் ஆழத்தில், இறைவனுக்கு செவிகொடுக்க நாம் முன் வந்தால், இதை உணரமுடியும், இறைவனை புகழ தூண்டும். 

Listen and Give Glory!

Tuesday, 27th week in Ordinary time

October 9, 2018: Gal 1: 13-24; Lk 10: 38-42

The Readings today insist on our need to listen to God. The credit that has to be given to Saul, in his turning into Paul is fundamentally his readiness to listen to God. If he were as stubborn as he always were, he would not have heard the Lord's voice from his horse! He himself reiterates his capacity to listen to God, by narrating his initial journey in the Lord, preparing himself to be an apostle: that was to the major part, an attentive listening to the Lord and to all that the Lord wanted to reveal.  

Mary at Bethany, is yet another icon of listening to God. She knew where the life giving source was: "to whom shall we go Lord, while you have the words of eternal life" were the words of Peter to the Word made flesh. Today we are called to discover the life giving Spirit in the Word that comes across to us on a daily basis. 

Our Blessed mother is the epitome of silent listening, for she kept everything in her heart and pondered, says the Gospel. We are in the month of the holy rosary and we missed celebrating our Our Lady of Rosary, the Sunday that passed! The practice of the Holy Rosary, is a wonderful lesson that Mary teaches us, to listen to God. Yes in praying the rosary, we listen to God speaking, God speaking in and through the sacred mysteries that are contemplated. From annunciation to coronation, true that we cannot find proofs from the Bible for every one of them, but in silent contemplation, we will come to realise the Divine Plan of salvation unfolding slowly but steadily.

Even in our lives, there is this profound plan of God that is gradually unfolding... If only we listen we shall become aware of it, and give glory to God for it!

நற்செய்தியின் உண்மை சாரம்

அக்டோபர் 8, 2018: கலா 1:6-12; லூக் 10: 25-31


ஒரு முறை கத்தோலிக்கர்களும் கத்தோலிக்கரல்லாதவர்களும் சரிசமமாய் இருந்த ஒரு குழுவிடம் உரையாற்ற நேர்ந்தது... முதலில் தொடங்கிய நான் இந்த கலப்பை எண்ணி சற்று எச்சரிக்கையோடு பேசத்தொடங்கினேன். ஒரு சில நிமிடங்கள் சென்றதும் என் மனத்திற்குள்ளாக இந்த தயக்கத்தை சரிசெய்துகொண்டு, நான் எப்போதும் பேசுவதை போல் மனம்விட்டு பேச ஆரம்பித்தேன். அந்த உரையின் முடிவில் கத்தோலிக்கரல்லாதவர்கள் பலரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து நான் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்காக நன்றி கூறி சென்றனர். யாரிடம் பேசினால் என்ன, நற்செய்தியை சரியாக முறையாக பற்றிக்கொண்டால் போதும் என்ற உண்மையை மீண்டும் ஒருமுறையாக நான் உணர்ந்த தருணம் அது!

நற்செய்தியின் உண்மை சாரம் அன்பே! கடவுள் நம்மை அன்பு செய்கிறார், நாம் அன்பு செய்தோமாகில் அவருக்கு சொந்தமானவர்கள் ஆகிறோம். இதை தவிர மற்றனைத்தும் நற்செய்தியை திரிப்பதாகவே அமைகிறது - பிரிவினை, பகை, தன்னலம், ஏமாற்று, அடுத்தவரை பயன்படுத்துதல், அடுத்தவர் பெயரை கெடுத்தல், தீர்ப்பிடுதல், ஏற்றத்தாழ்வு போற்றுதல்... என இவை அனைத்துமே நற்செய்திக்கு எதிரானவை தானே! 

சில நேரங்களில் துன்பம், சிலுவை, தியாகம் என இவை தான் நற்செய்தியின் பேருண்மைகளாக நமக்கு தோன்றலாம், ஆனால் உண்மை அதுவல்ல... இவற்றிற்கும் பொருள் தரக்கூடியதாய் அன்பேயுள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.  துன்பமே வாழ்க்கை, என்பது நேர்மறையான சிந்தனையே அல்ல. ஆனால் அன்பிற்காக துன்பம் ஏற்றல் என்பது ஆழ்ந்த பொருள் தருகிறது. சிலுவையும் கூட அன்பின் பார்வையில் காணப்படாவிட்டால், அது வெறும் தோல்வியின், அவமானத்தின் சின்னமே; ஆனால் அன்பு அந்த சிலுவையை வெற்றியின் சின்னமாக்குகிறது. தியாகமும் கூட அன்பு இல்லையேல் வெறும் தற்புகழ்ச்சியாக, என்னையே நான் முன்னிறுத்துவதற்கான கருவியாக மாறிவிடும். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் பாடங்களாகும் - இதைக்காட்டிலும் வேறு நற்செய்தி என்று ஒன்றில்லை என்கிறார் பவுலடிகளார். 

தேவையில் இருக்கும், துன்பப்படும், யாருமின்றி நிற்கும் ஒவ்வொருவரும் என் அயலானாகிறார்; சகோதரராகின்றார். அடுத்தவரின் தேவையும், துன்பமும் அறிந்து கரம் நீட்டும் மனம் என்னில் உள்ளதா? அல்லது யார், எவர், ஏன், எனக்கென்ன பயன் என்ற எண்ணங்களே என்னில் மேலோங்கி நிற்கின்றனவா? நற்செய்தியின் உண்மை சாரம் உணர்வோம், அன்பை கொண்டாடுவோம், அன்பில் ஒன்றாகுவோம்!