Thursday, August 2, 2018

வேறுபட்ட கேளாத்தன்மை!

ஆகஸ்ட் 3, 2018: எரே 26: 1-9; மத் 13: 54-58


ஒருமுறை எனது அன்னையோடு காது கேட்கும் திறன்கூட்டும் இயந்திரம் விநியோகிக்கும் மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த பொறியாளர் காது கேளாத்தன்மையை பற்றி எங்களுக்கு விளக்கி கொண்டிருந்தார்... காது கேளாமையில் பல வகைகள் உண்டு: லேசான கேளாத்தன்மை, மிதமான கேளாத்தன்மை, சற்றே தீவிர கேளாத்தன்மை, தீவிர கேளாத்தன்மை, முற்றிலும் கேளாத்தன்மை என்று பட்டியலிட்டு கொண்டே சென்றார்... அப்போது எனக்கு ஒன்று தோன்றியது. இந்த வரிசையில் மற்றொரு கேளாத்தன்மையையும் நாம் சேர்க்க வேண்டியுள்ளது: சிலவற்றை மட்டும் கேளாத்தன்மை! பல வேளைகளில் நாம் அப்படி தான் செயல்படுகிறோம், நமக்கு வேண்டியதென்று நாம் கருதுவதை மட்டும் கேட்டுவிட்டு, நமக்கு தேவையில்லாதது என்று தோன்றுவனவற்றை கேட்காமலேயே விட்டுவிடுவது! இது பல நிலைகளில் நன்மை பயக்கக்கூடும் எனினும், இறைவார்த்தையை பொறுத்தமட்டில் இவ்வகை செயல்பாடு நம்மை அழிவுக்கு கொண்டுச்செல்லும், என்று இன்றைய வாசகங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. 

இறைவனை விட்டு விலகி சென்றுகொண்டே இருப்பதனால் அவர்களுக்கு வரவிருக்கும் அபாயங்களை எடுத்து கூறும் எரேமியா அந்த மக்களுக்கு எதிரியாகிவிடுகிறார், ஏனெனில் அவர்களுக்கு அதை கேட்க விருப்பமில்லை! இயேசு கிறிஸ்து சுற்றி இருந்தோரை பார்த்து அவர்களது வாழ்க்கை முறையை பார்த்து அதில் உள்ள குறைகளை சுட்டி காட்டியபோது அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இவர் யார் அதை கூறுவதற்கு! இவருக்கு என்ன தகுதி  இருக்கிறது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டதை கேட்டார்களே தவிர அவர் சொல்லுவதை கேட்கவில்லை, கேட்க விரும்பவில்லை!

இன்றும் நமது உள்ளங்களில் இறைவார்த்தை என்னும் அருளருவி பாய்ந்தவண்ணமே இருக்கிறது...அது பாய்ந்து, பாயும் இடமெல்லாம் தூய்மையும், செழுமையும் தரக்கூடும். ஆனால் அதை பாயாமல் செயலிழக்க செய்துவிட்டோமேயானால், நம்மில் எந்த ஒரு மாற்றமும் நிகழாது. மாற்றம் இல்லா நிலை, உயிரற்ற நிலையாகும்! நாம் உயிரற்றவர்களாக போகிறோமா, உயிரோட்டம் பெற விரும்பிகிறோமா? அது நம் தேர்வை பொறுத்ததே. 

இறைவார்த்தையை முழுமையாய் கேட்போம், உள்வாங்குவோம், மாற்றம் பெறுவோம், உயிரோட்டம் பெறுவோம், உலகிற்கு உயிரளிப்போம்!

No comments: