Wednesday, August 1, 2018

மண் கலன்களும் மகிமையின் கருவூலங்களாகும்!

ஆகஸ்ட் 2, 2018: எரே 18: 1-6 ; மத் 13: 47-53



நான் மண்ணாக இருந்தாலும் குயவனின் கையில் இருக்கும் வரை என் வாழ்வு மகத்துவத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கும். குயவனுக்கு மண்ணையும் தெரியும், சுற்றியுள்ள நிலைகளையும் தெரியும், வெறும் மண்ணான நான் பொன்னாக மிளிர, செய்ய வேண்டியது என்னவென்றும் தெரியும். அப்படியிருக்க அவரது கரங்களில் இருப்பதை காட்டிலும் மேலானதொரு பாதுகாப்பும் பொருளும் இருக்க முடியுமா? இதை ஏன் மனிதர்களாகிய நாம் உணர மறுக்கிறோம் என்பதே இன்றைய இறைவார்த்தையின் கேள்வி. 

என் தாயின் கருவிலே நான் உருவாகும் முன்னரே என்னை அறிந்திருக்கும் என் ஆண்டவருக்கு தெரியாததையா நான் தெரிந்துகொள்ள போகிறேன், அறிந்துணர போகிறேன், புரிந்து வளர போகிறேன்? அவரது திட்டத்தின் படி, அவரது சித்தத்தின் படி செயல்பட நான் என்னையே சரணாக்கும் போது என்னிலே பல மின்னல்கள் தோன்றுவது இயல்பே! சில மின்னும், சில பற்றியெறியச் செய்யும் - கவலைகள் வேண்டாம்: உடைந்தாலும், சிதைந்தாலும், குழைந்தாலும், உருகுலைந்தாலும், அவர் கையில் உள்ள வரை நான் உருவாகிக்கொண்டே இருக்கிறேன். ஒரு நாள் வரும், ஒரு தருணம் வரும்... நான் அழகிய மண்பாண்டமாவேன்; வெறும் மண் கலனல்ல, மகிமையின் கருவூலமாவேன்.

துன்பங்களும், துயரங்களும், வேதனைகளும், சோதனைகளும், என்னிலே நன்மையையும் தீமையையும் பிரித்தெடுக்கும் தருணமென்று நான் உணர வேண்டும். பிரித்தெடுத்த பின், பழையதும் புதியதுமாய் என்னுளிருந்து இறைவனின் மகிமை வெளிப்படுவதை நானும் இந்த உலகும் கண்டு அதிசயிக்கும் தருணம் வரும்... நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்: என்றும் குயவராம் இறைவனின் கையில் வெறும் மண்ணாய், பாசத்தோடு பக்குவப்பட்ட நம்பிக்கையோடு நிலையாய் இருக்க முடிவெடுப்பதே!

மண் கலன்களும் மகிமையின் கருவூலங்களாய் உருவெடுக்கும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை - காத்திருப்போம், உருபெறுவோம், இறைவனின் பிள்ளைகளாவோம்!

No comments: