Friday, August 3, 2018

முழுமையான இறைவாக்கினர்களாக...

புனித ஜான் மரிய வியான்னி - நினைவு


ஆகஸ்ட் 4, 2018: எரே  26: 1-11,16 ; மத் 14: 1-12



கொலை மிரட்டல்கள், நிராகரிப்பு, ஏற்றுக்கொள்ளப்படாமை, யாருக்காக அனைத்தையும் செய்கிறோம் என்று நினைக்கிறோமோ அவர்களிடமிருந்தே வெறுப்பு - இவையே ஒரு முழுமையான இறைவாக்கினரின் வாழ்வாகும். எரேமியாவின் காலத்திலும், திருமுழுக்கு யோவானின் காலத்திலும் மட்டுமல்ல, இன்றும் இதுவே உண்மையாக இருப்பதை நாம் காணமுடிகிறது. ஆகையால் தான் உண்மையான முழுமையான இறைவாக்கினர்கள் தோன்றுவது அரிதாகின்றது. எனினும் நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு உண்மை என்னவென்றால், உண்மை இறைவாக்கினர்களுக்கும், தற்பெருமை சாற்றும் போலி இறையூழியர்களுக்கும் ஒரு மெல்லிய கோடே வேறுபாடாய் என்றும் அமைந்துள்ளது! 

இந்த வேறுபாடுகளில் முதன்மையானது, நோக்கம். எதை நோக்கி நமது சொற்களும் செயல்களும் நகர்கின்றன, மற்றவர்களை நகர்த்துகின்றன என்று நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. எரேமியாவோ, யோவானோ, தாங்கள் பேசியபோது இறைவன் விரும்பியதை பேசினார்கள், யாருடைய ஆதரவையோ, அரணையோ அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

இரண்டாவதாக, விளைவின் மீது பற்றின்மை. தாங்கள் சொல்வது ஒரு விளைவை, மாற்றத்தை நோக்கி இருந்தாலும், அந்த மாற்றத்தின் அல்லது விளைவின் மீது அவர்கள் எந்த ஒரு பற்றுமின்றி இருந்தார்கள். சில நேரங்களில் இறையடியார்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், தங்கள் பெயர், புகழ், நினைவு என்றும் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே பலவற்றை செய்வதை நாம் கண்டதுண்டு அல்லவா?

மூன்றாம் வேறுபாடு, பயமின்மை. இதுவே அவர்களை பெரும் ஆற்றல் வாய்ந்தவர்களாக மாற்றிவிடுகின்றது. யாருக்கும் எதற்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே கட்டுப்படக்கூடிய மனநிலை என்பது கட்டுக்கடங்காத ஆற்றலை உண்மையிலேயே தரக்கூடிய குணமாகும். இந்த பயமின்மை அவர்களது தனிப்பட்ட துணிச்சலிலிருந்து வருவதல்ல. மாறாக இறைவனின் உடனிருப்பில் அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்தே பிறக்கிறது.


இம்மூன்று வேறுபாடுகளையும் தன்னகத்தே மிக ஆணித்தரகமாக கொண்ட புனிதர் ஒருவரை நாம் இன்று கொண்டாடுகின்றோம் - புனித ஜான் மரிய வியான்னி! குருவாவதற்கான பயிற்சியின் இடையில் அவரது இயலாமையை காரணம் காட்டி அவரை வெளியேற்ற சிலர் நினைத்த போதும் சரி, யாரும் கேள்விப்படாத குக்கிராமமமான ஆர்ஸ் என்னும் ஊருக்கு அவரை கண்காணா இடத்திற்கு அனுப்புவதாய் நினைத்து அனுப்பிய போதும் சரி, புதிதாய் வந்துள்ள குரு யாரென்று கூட கவலைப்படாத மக்களாய் தன் பங்கு மக்கள் இருந்தபோதும் சரி, யாருமற்ற வெறும் இருக்கைகளுக்கு மறையுரை ஆற்றவேண்டிய நிலை வந்தபோதும் சரி, ஜான் வியான்னி மனமுடையவில்லை, நிலைகுலையவில்லை. அவரது நம்பிக்கை நிலையாயிருந்தது, அந்த ஊரை மட்டுமல்ல, சுற்றியுள்ள அனைத்து மக்களையும் மனமாற்றியது! இதுவே உண்மையான இறைவாக்கினருக்கு அடையாளம்!

அதே நம்பிக்கையோடு வாழமுடிவெடுக்கும் நாம், இன்று நமக்கு தெரிந்த அனைத்து குருவானவர்களுக்காகவும் ஒரு சிறு செபத்தை ஏறெடுப்போம் ... சிறப்பாக பிரச்சனைகளில் இருக்கும் குருவானவர்கள், நம்பிக்கையில் தளர்ந்துள்ள குருவானவர்கள், இடறல்களில் சிக்கியுள்ள குருவானவர்களை இறைப்பதம் சரணாக்கி செபிப்போம்!

No comments: