Wednesday, January 17, 2018

சனவரி 18: எல்லா புகழும் இறைவன் ஒருவருக்கே!

போற்றுவாரும்  தூற்றுவாரும் நிறைந்ததே உலகு 


நமது மனத்திற்குள் அழிவின் எண்ணங்களை புகுத்துவது நம் எதிரியாம் தீயோனுக்கு அவ்வளவு கடினமான காரியமல்ல. நம்மையே அறியாமல் இவ்வெண்ணங்களை புகுத்துவதிலே அவன் வல்லவன். அதை செய்ய அவனுக்கு உதவும் மாபெரும் கருவி - நான் என்ற அகந்தை. இந்த அழிவின் தொடக்கத்தில் தான் சவுலை இன்று நாம் சந்திக்கின்றோம். அதுவரை இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவனாய் இஸ்ரயேல் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவனாய் இருந்த சவுல் தனது அழிவை நோக்கி இன்று முதலடி வைக்கிறார் - பொறாமையின் வழியாக. தன்னை விட தாவீதை அதிகமாக புகழ்ந்துவிட்டார்கள் என்ற உண்மை அவரது கண்களை மறைத்து, தான் பெற்ற ஆசீர்வாதங்களையெல்லாம் இழக்க செய்கிறது. 

கடவுளிலேயே நான் என் நம்பிக்கையை வைத்துள்ளேன் என்று வாயளவிலே கூறினால் மட்டும் போதாது. அதை வாழ்வாக்க நாம் அன்றாடம் என்ன செய்கின்றோம் என்று சிந்தித்து பார்க்கவேண்டியுள்ளது. பிறரின் பாராட்டும் அவர்களின் விமர்சனமும் எந்த அளவுக்கு நம்மை அடிமைகளாக்கி வைத்துள்ளன என்று உணர்ந்துகொள்ளுதல் நலம். புகழிலே மூழ்கிப்போவதும், விமர்சனங்களில் நொடிந்து போவதும் இயற்கையான எதிரிலிகள் என்றாலும், இறைவனின் சித்தத்தை மட்டுமே மனதில் கொண்டு செயல்படும் ஒருவருக்கு இவைகளை அப்பாற்பட்டு சிந்திக்க முடியும். 

போற்றுவோரும் தூற்றுவோரும் அல்ல, என்னை படைத்து அழைத்திருக்கிற இறைவனே என் ஆதாரம். அவரின் சித்தப்படி என் வாழ்வை வாழ எனக்கு தெரியுமென வாழும் ஒவ்வொருவரும் உண்மையில் கிறிஸ்துவின் சீடர்களே! எல்லா புகழும் இறைவன் ஒருவருக்கே!

No comments: