Monday, April 16, 2018

ஏப்ரல் 17: அவரை கண்டு, அவராக...

கிறிஸ்தவ வாழ்வு என்பது கிறிஸ்துவாக மாறுவதே 

மனதில் பாரங்களோடு சிலர் வந்து பகிரும்போது, அந்த கவலைகளுக்கு உண்மையிலேயே பொருள் தெரியாத போது, அவர்களை பார்த்து சிலுவையை பாருங்கள், அதில் தொங்கும் கிறிஸ்துவை பாருங்கள், அவர் பட்ட துன்பங்களை பாருங்கள், அனைத்தையும் தாண்டி அவர் தன்னையே தந்தையின் கரங்களில் ஒப்புக்கொடுத்த விதத்தை பாருங்கள், என்று நான் சொல்வதுண்டு... உடனே அவர்கள், "என்னதான் இருந்தாலும் அவர் கடவுளின் மகன்; அவரால் முடியும்" என்பார்கள். உடனே நான் அவர்களை பார்த்து, "நீங்கள் இப்போது சொன்னது ஒரு தப்பறை, இதற்காக திருச்சபையிலிருந்து கூட உங்களை விலக்கி வைக்க முடியும்" என்று பயமுறுத்தி சிரிப்பதுண்டு!

ஆம், கிறிஸ்து மனிதனாக வாழ்ந்தார், அந்த துன்பங்களை எதிர்கொண்டார்... அவர் மனிதனை போல் வாழவில்லை, ஒரு மனிதனாக வாழ்ந்தார்.  எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் நமக்கு கூறுவதுபோல, பாவம் தவிர மற்றனைத்திலும் அவர் மனிதனாகவே வாழ்ந்தார். பல முறை நாம் இதை பொருட்படுத்துவதே இல்லை, ஏனெனில், இதை நாம் ஏற்றுக்கொண்டால், வேறொரு சவாலையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும்... அவரை கண்டு அவராகவே வாழ்வதே அந்த சவால் - அதுவே கிறிஸ்தவர் என்ற பெயருக்கு உண்மை பொருளாகும். தொடக்க கால திருச்சபை இதை தெளிவாய் உணர்ந்திருந்தது.

அதை வாழ்ந்து காட்டிய  ஒருவரை தான் இன்று முதல் வாசகத்தில் சந்திக்கிறோம் - ஸ்தேவான். ஸ்தேவான் கொல்லப்பட்ட காட்சியை விளக்கும் போது லூக்கா மறவாமல் ஸ்தேவான் இறந்தபோது கூறிய வார்த்தைகளை குறிப்பிடுகிறார், அதற்கு ஒரு காரணமுண்டு. அதென்னவென்றால், கிறிஸ்து சாகும் போது சிலுவையில் கூறிய அதே வார்த்தைகளை ஸ்தேவானும் கூறுகிறார்... கிறிஸ்துவின் அதே மனநிலையோடு அவர் உயிர்துறக்கிறார், ஏனெனில் கிறிஸ்துவின் அதே மனநிலையோடு அவர் வாழ்ந்துவந்தார்.

தங்களுக்கு வானிலிருந்து மன்னா அளித்தது மோசே தான் என்று மேலோட்டமாகவே தங்கள் நம்பிக்கை வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களை சிந்திக்க வைக்கிறார் கிறிஸ்து. வெளியடையாளங்களையும், புறத்தோற்றங்களையும் தாண்டி நமது நம்பிக்கை வாழ்வு வாழப்பட வேண்டும். ஆழமாக கிறிஸ்துவை கண்டு, அவரை புரிந்துகொண்டு, அவராகவே நாம் வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

No comments: