Thursday, October 18, 2018

கடவுளின் உரிமையின் முத்திரை

அக்டோபர் 19, 2018: எபேசியர் 1:11-14; லூக்கா 12: 1-7


சில நேரங்களில் நான் சிலரை கண்டு வியந்தது உண்டு... இவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென விரும்புகிறார்களா இல்லையா என்று! மகிழ்ச்சியாயிருக்க காரணமும் வழியும் ஆயிரம் இருக்க, தவறாக செல்லும் ஓரிரு காரணங்கங்களை மட்டும் பிடித்து கொண்டு தங்கள் வாழ்வையும் தங்களை சுற்றி இருப்போர் வாழ்வையும் நரகமாக்கி அதிலேயே இருந்துவிட எண்ணும் இவர்களது போக்கு உண்மையிலேயே வியப்பும் வருத்தமும் தரக்கூடியது! உண்மையில் நான் கடவுளின் மகனாய் மகளாய் இருந்தால், எனக்குள் இருக்கும் இந்த மனநிலையை நான் முதலில் களைய வேண்டும். 

கிறிஸ்து இன்று கூறும் அச்சமற்ற மனநிலை என்பது இதை சார்ந்ததே. அஞ்சாதீர்கள், அஞ்சாதீர்கள் என்று திரும்ப திரும்ப கூறும் கிறிஸ்துவின் மனதை புரிந்து கொள்ள முயற்சிப்போம்... உண்மையான நிலைபாடுகளும், சரியான சிந்தனையும், நேர்மறையான வாழ்வியல் முறையும் இருந்துவிட்டால் நாம் யாரையும் எதையும் குறித்து அஞ்ச வேண்டும் என்ற அவசியமே இல்லை. நான் கடவுளுக்கு சொந்தமானவன், கடவுள் எனக்கென ஒரு திட்டத்தை வைத்துள்ளார், அதை நான் அறிவேன், படி படியாய் அதை எனக்கு உணர்த்தியும் வருகின்றார், அவரது வழிகளில் நான் நடக்கும் போது எந்த இருளும் என்னை மேற்கொள்ளாது, எந்த இழிநிலையும் எனக்கு வந்து விடாது ஏனெனில் அவரே எனக்கு கேடயமும் பலமுமாய் இருக்கிறார், அவரே என்னை காக்கின்றார், ஏனெனில் நான் அவருக்கே சொந்தமானவன், சொந்தமானவள் - இதுவே உண்மை, இந்த உண்மையே நம்மை விடுதலையாகும்!

இந்த உண்மையை நமக்கு விளங்கச்செய்பவர் தூய ஆவியானவரே... அவரே இறைவன் என் மீது கொண்டுள்ள உரிமையின் முத்திரை ஆவார், என்கிறார் பவுலடிகளார். இந்த தூய ஆவியார் என் உள்ளத்திலே பொழியப்பட்டுள்ளார், குடிகொண்டுள்ளார், தொடர்ந்து என்னை வழி நடத்துகின்றார். அவரது உரிமையின் முத்திரையை நான் உணர்கின்றேனா, அதற்கு கட்டுப்பட்டு வாழ்கின்றேனா... அவ்வாறு வாழ்ந்தால் எனக்குள்ளிருக்கும் மகிழ்ச்சியை யாராலும் எந்நேரத்திலும் எடுத்துவிட முடியாது!

No comments: