Friday, October 19, 2018

ஒருமனப்பாடும் அர்ப்பணிப்பும்

அக்டோபர் 20, 2018: எபேசியர் 1:15-23; லூக்கா 12: 8-12


இன்றைய வார்த்தை நம்மை தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் நமது நம்பிக்கையின் முழுமுதல் உண்மையாம் மூவொரு இறைவனின் முன் நிறுத்துகிறது! பவுலடிகளாரும் சரி நற்செய்தியில் கிறிஸ்துவும் சரி நமக்கு மூவொரு இறைவனின் உண்மையையும் அவர் நமக்கு தரும் சவாலையும் முன் நிறுத்துகிறார்கள். மூவொரு இறைவனின் இலக்கணமாம் ஒருமனப்பாடும் அவரது இயல்பாம் அர்ப்பணிப்பும் நமக்கு சவாலாக தரப்படுகின்றன.

இன்று உலகளாவிய திருச்சபையை, அதாவது இறைவனின் மக்களை, காணும்போது ஒருவிதமான வருத்தம் நம் மனதை தழுவி கொள்கிறது. எத்தனை எத்தனை பிரச்சனைகள், பிரிவினைகள் பூசல்கள் குழப்பங்கள்... காரணம் என்ன? எல்லாமே இறைசித்ததை ஒட்டியதா? இறையரசை முன்னிறுத்தியதா? இறைவனின் மேலான மகிமையை பற்றியதா? இந்த சூழலில் தான் இன்றைய வார்த்தை நம்மை ஒருமனபாட்டிற்கு அழைக்கிறது. இது வெறும் எதிராளிகளுக்கு பயந்து ஒட்டி வாழும் வெற்று ஒற்றுமையல்ல, கூட்டுசதியும் அல்ல. ஆனால் இறையரசு என்னும் ஒரே மையத்தை, இறையாட்சி என்னும் ஒரே இலக்கை ஒன்றித்து காண்பதால் ஏற்படுகின்ற ஒருமனப்பாடு... ஒரே மனதும் ஒரே சிந்தனையும் கொண்ட மக்களாய் உருவாகும் அன்பின் நிலை! இந்த நிலையே இறையரசாகும், இறையாட்சியாகும். 

பல நேரங்களில் இது வெறும் வாய்ப்பேச்சாகவே இருந்து விடுகிறது, இதுவே பெரும் வேதனை! இறையரசு என்பது வெறும் பேச்சால் நிகழ்வதல்ல, கூட்டங்கள் மாநாடுகளால் உருவாவதல்ல... உண்மையான அர்பணிப்பால் உருவாகிறது, முழுமையான அர்பணிப்பால் மட்டுமே மலர்கிறது. துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள், இடர்கள் என எதையும் பொருட்படுத்தாது அடுத்தவர் நலன், பொது நலன், மானுடம் முழுதின் நல்வாழ்வு, அண்டம் அனைத்தின் அக்கறை என்று நாம் சிந்திக்கும் போதே அர்ப்பணம் தோன்றுகிறது. இறையரசை நாம் நிறுவ நினைத்தால் இவற்றிற்கு ஒருமனதாய் நமது தேர்வை வெளிப்படுத்த வேண்டும். இதுவே அர்ப்பணம். 

ஒருமனபாட்டிலும் உண்மை அர்ப்பணத்திலும் வளர முயல்வோம், இறையரசை நம் மத்தியிலே நிறுவி வாழ்வோம்!

No comments: