Friday, October 5, 2018

நான் காணும்படி செய்யும்!

அக்டோபர் 6, 2018: யோபு 42: 1-3,5-6,12-17; லூக் 10:17-24


யோபு தன் பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டார் என்று முதல் வாசகம் நமக்கு தெரிவிக்கிறது. நீங்கள் காண்பவற்றை காண்பவர்கள் பேறுபெற்றோர் என்று கிறிஸ்து தன் சீடர்கள் எவ்வளவு பேறுபெற்றவர்கள் என்பதை நற்செய்தியில்  தெளிவுபடுத்துகிறார். இன்றைய வார்த்தை நமக்கு தரும் பாடம் இதுவே: நாம் காண்பவை நாம் காண்பவை மட்டுமல்ல, நாம் காண நமக்கு கொடுக்கப்பட்டவை என்பதை நாம் உணரவேண்டும் என்பதே. 

நான் உம்மை கண்கூடாக காண்கின்றேன் என்று யோபு கூறும்போது, அதுவரை அவர் காண தவறியதை இறைவன் அவருக்கு வெளிப்படுத்தியதை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றார்.  நாம் இறைவனிடம் கேட்கக்கூடிய வரம் இதுவே, நாம் காணாமலே விட்டுவிடும் பலவற்றை காணும் பேற்றை இறைவன் தரவேண்டும் என்று கேட்போம் - அவர் நாம் காணவேண்டும் என்று விரும்புவதை, நம் வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றியமைக்க கூடியவற்றை, நம் வாழ்க்கையின் உண்மை பொருளை முழுமையாய் நாம் உணரசெய்வனவற்றை நாம் காண நமக்கு வரம் தர வேண்டுவோம். 

பல வேளைகளில் நான் நினைத்தது உண்டு. மற்றவரை துன்புறுத்தும் மரத்துப்போன இதயம் உள்ளவர்கள், தான் என்ற அகந்தையோடு அடுத்தவரை அலட்சியப்படுத்துபவர்கள், தன்னல போக்கோடு யாரையும் பற்றி கவலைப்படாமல் தான் மட்டுமே வாழ சிந்திப்பவர்கள், தன் வசதிக்காகவும் வாய்ப்பிற்காகவும் யாருக்கும் எதுவும் செய்ய துணிபவர்கள் என்று இதுபோன்ற மனிதர்கள் உண்மையில் தாங்கள் யார், தங்களுக்கு என்ன நேரப்போகிறது, தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்ணெதிரே கண்டால் எப்படியிருக்கும் என்று. ஆனால் அதை வெளிப்படுத்துவது இறைவன் அல்லவா, நாம் சிந்தித்து என்ன பயன்!

ஆம் அனைவரும் அனைத்தையும் காண்பது கிடையாது. இறைவன் யார் எதை காணவேண்டும் என்று சித்தமாயிருக்கிறாரோ அவர்களே காண முடிகிறது. குழந்தைகளுக்கும், எளியோருக்கும், தாழ்சியுள்ளோருக்கும், கீழ்படிவோருக்கும், கனிவுள்ளோருக்கும், உண்மையுள்ளோருக்கும் மட்டுமே கடவுள் தன்னையே வெளிப்படுத்துகிறார்; காணச்செய்கிறார். இன்று நமது செபமும் இப்படியே அமையட்டும்: இறைவா, நீர் விரும்புவதை, நீர் திட்டமிட்டுள்ளதை, உம்பால் என்னை ஈர்க்கக்கூடியதை, என் வாழ்விற்கு பொருள் தரக்கூடியதை, நீர் தரும் அமைதியையும் உளநிறைவையும் தரக்கூடியதை நான் காணும்படி செய்யும்! ஆமென்.

No comments: