Tuesday, January 9, 2018

சனவரி 10: பேசும் இறைவா

இறைசித்தம் நிறைவேற்றுவதே நம் அழைப்பு   

பேசும் இறைவா அடியேன் கேட்கின்றேன் என்னும் அந்த அழகான வார்த்தைகளை ஏலி சாமுவேலுக்கு கற்பிக்கும் நிகழ்ச்சியை இன்று தியானிக்கின்றோம். பல பணிகள் புரிவது சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை புரிவது...இவை எல்லாம் மிக அழகானவை. ஆனால் நம் வாழ்வின் நாட்கள் மிக குறைவு... நன்மைகளை செய்வது மட்டுமே ஒரு கிறிஸ்தவருக்கு போதாது...இறைவனின் சித்தத்தை செய்யும் மனம் வேண்டும். 

நன்மைகள் செய்வதில் வரும் பாராட்டும் புகழும் மற்றவரிடமிருந்து கிடைக்கும் நற்பெயரும் சில சமயங்களில் நம்மை பாதை மாற செய்யும். செய்வது நானாக இருந்தாலும் செய்விப்பது இறைவன் என்று நாம் உணர்ந்து செய்தால் பல வகையான குழப்பங்களை தவிர்க்க இயலும். 

ஒரு குழுவாக சேர்ந்து நற்காரியங்களில் ஈடுபடுதலோ, அல்லது பங்கு அன்பியம் என  பொதுவான நற்செயல்களில் ஈடுபடுதலோ சில நேரங்களில் சண்டைகளிலும் புரிந்து கொள்ளாமையிலும், பொறாமையிலும் முடிவதற்கான காரணம் என்ன என்று சிந்தித்து பாருங்கள். நான் என்ற எண்ணம், என்  திறமை எனது ஆற்றல் என்ற எண்ணம் - இவையே அல்லவா? 

கிறிஸ்துவின் பணிகள் மக்களுக்காகவே இருந்தாலும் அவரது மனம் முழுதும் இறைவனின் சித்தத்தை செய்வதாகவே இருந்தது. மக்களின் பாராட்டுக்களும், அவர்களது பாசமும் அவரை கட்டிப்போட எண்ணினாலும், அவர் அதையெல்லாம் தாண்டி இறைவனின் சித்தத்தை சிரமேற்கொண்டு தொடர்ந்து நடக்கலானார் என்று காண்கிறோம். இவரை விட ஆழமான எடுத்துக்காட்டு இருக்க முடியுமா? 

பேசும் இறைவா அடியேன் கேட்கின்றேன் என்ற வார்த்தைகள் ஆழமாய் நம் மனங்களில் பதியட்டும்.


No comments: