Friday, January 12, 2018

சனவரி 13: தேடும் அன்பு தெய்வம்

நம்மை தேடி வரும் அரசரை அறிவீரா?


இன்றைய இறைவார்த்தை நமக்கு இரண்டு நபர்களை குறித்து பேசுகிறது... தொலைந்து போன கழுதைகளை தேடிச்சென்ற ஒருவர் தொலைந்து போன ஆன்மாக்களை தேடிச்சென்ற மற்றொருவர்; சற்றே வினோதமான ஒரு ஒப்புமை என்றாலும், இதில் வரும் இருவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு - இருவரும் அரசர்களே! இஸ்ரயேல் மக்களினன் முதல் அரசனான சவுல் ஒருவர், இவ்வுலகின் முடிவில்லா அரசரான கிறிஸ்து மற்றொருவர். இவர் பாவிகளை, தகுதியற்றவர்கள் என்று தங்களையே கருத்துவோரை, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோரை தேடி செல்லும் அரசனாவார். வரலாற்றிலே மனிதர்கள் இறைவனை தேடி அலைவதாய் நாம்  கண்டாலும், உண்மை இறைவன்  மனிதரையும் தேடி வருகின்றார். நமது தகுதியின்மையோ, பாவநிலையோ அவரை நம்மை விட்டு அகல செய்யாது. அனால் நமது மனங்களை திறந்து இவ்வரசருக்கு இடம் தருவது நம்மையே பொறுத்துள்ளது. 

வெறும் உவமையில் ஒப்புமையிலும் இன்றைய செய்தியை இழந்துவிடாமல் காத்துக்கொள்வோம். செய்தி ஒன்று தான்: திறந்த மனதோடு, முழு உள்ளத்தோடு ஒவ்வொரு நாளும் நம்மையே இறைவனின் பிள்ளைகள் என்ற நிலையில் காத்துக்கொள்வதே நம் அழைப்பு. உனக்கு எதிரானவர்கள், புரிந்துகொள்ளாதவர்கள், உன்னை குறித்து அவதூறுகள் பரப்புபவர்கள் உன்னை சுற்றி இருக்கத்தான் செய்வார்கள். கிறிஸ்துவுக்கு இருந்தார்கள். அவரை போன்றே இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது இறைவனை பற்றிக்கொண்டு வாழ போகிறாயா? அல்லது தேர்ந்துகொள்ளப்பட்டும் அந்த உன்னத நிலையை இழந்த சவுலை போல மாறப்போகிறாயா?

தேடும் அன்பு இறைவன் உன்னை தேடி வந்துள்ளார், உன்னை தேர்ந்துகொண்டுள்ளார். அதை மறவாது அவரின் பிள்ளையாய் ஒவ்வொரு நாளும் வளர முயற்சிப்போம்.


No comments: