Thursday, January 25, 2018

சனவரி 26: விதையும் அதன் பலனும்...

திமோத்தேயுவும் தீத்துவும் தரும் பாடம் 

திமோத்தேயுவும் தீத்துவும் இன்று நமக்கு மாதிரிகளாய் தரப்படுகின்றார்கள்... இருவரும் அப்போஸ்தலராம் பவுலடிகளாரின் சீடர்கள். தன் வார்த்தையை கேட்பவர்களையும் தன் வாழ்க்கையை காண்பவர்களையும் இறையேசுவுக்காக வென்றெடுப்பதில் தூய பவுல் அடிகளாருக்கு இணை அவர் மட்டுமே. இறையாட்சி மண்ணில் மலர இவ்வப்போஸ்தலர்களும் சீடர்களும் தங்கள் வாழ்க்கையை எந்த அளவுக்கு தியாகம் செய்தார்கள் என்று சிந்திக்க அழைக்கும் அதே நேரத்தில் இன்றைய வாசகங்கள் நமக்கும் அதே அழைப்பு தரப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள நம்மை அழைக்கின்றன. 

கொடையாய் நமக்கு தரப்பட்டுள்ள கிறிஸ்தவ நம்பிக்கையை குறித்து எவ்வளவு அழகாக பவுலடிகளார் திமோத்தேயுவுக்கு எழுதுகிறார் என்று இன்றைய முதல் வாசகத்தில் காணுங்கள். விதையாய் நம் மனதில் தூவப்பட்டுள்ள இந்நம்பிக்கையை காத்து வாழ்வது, அதை அடுத்தவரோடு பகிர்ந்து கொண்டாடுவது என்ற நமது அழைப்பை நாம் உணர்ந்திருக்கின்றோமா?

நம் உள்ளத்தில் தரப்பட்டிருக்கும் இந்த கொடையாம் நம்பிக்கை இறையாட்சி என்னும் பயிராய் முளைக்க வேண்டும், பலன் தரவேண்டும் என்பது இறையழைப்பு. ஆனால் அதை வளரச்செய்வது நமது கையில் இல்லை...அது இறைவன் தரும் கொடையாகும். பொறுமையிழக்காமல், ஆர்வமிழக்காமல், கவனம் சிதறாமல் விதைக்கப்பட்ட விதையை (நம்பிக்கை) பாதுகாப்பது நம் பொறுப்பு, அதை பலனளிக்க செய்து பயிராக (இறையாட்சியாக) உருமாற்றுவது இறைவனின் பொறுப்பு - இதை உணர்ந்து வாழ்வதே கிறிஸ்தவ அழைப்பு. 

சோதனைகள் எதிர்ப்புக்கள் சவால்கள் மத்தியில் கிறிஸ்தவ மதிப்பீடுகளை இழக்காமல் வாழ்வதே நம் நம்பிக்கையை காப்பது என்று பொருள்படும். இது நம்மால் முடியும் ஏனெனில் ஆற்றலின் ஆவியை, அன்பின் ஆவியை, சுய கட்டுப்பாட்டின் ஆவியை இறைவன் நமது உள்ளத்தில் பொழிந்துள்ளார். திமோத்தேயுவை போல தீத்துவை  போல பவுலடிகளாரின் பாதையில் இறைவார்த்தையின் மக்களாய் நம்பிக்கையில் நம் வாழ்வை ஊன்ற செய்வோம், இறையாட்சியின் அறுவடையை பலுகச் செய்வோம்.

No comments: