Friday, January 26, 2018

சனவரி 27: அவரன்றி நீயேது?

இரவோ பகலோ புயலோ மழையோ ....

தாவீது என் மகன் என்று இறைவன் உரிமையோடு சொல்ல காரணமென்ன, சிந்தித்திருக்கிறீர்களா? அவரது போர்த்திறனா? வீரமா? வெற்றிகளா? அல்லது பேராற்றலா? இறைவனின்றி இவையெல்லாம் அவருக்கு ஏது? இவற்றிற்கெல்லாம் மேலாக ஒரு குணம் தாவீதுக்கு இருந்தது...அதுவே அவரை கடவுளுக்கு நெருக்கமானவராக, நமக்கு மாபெரும் எடுத்துக்காட்டாக பிரித்துக்காட்டுகிறது. அவரது தாழ்ச்சியும் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க அவரிடம் இருந்த தயார்நிலையும் தான் அது. 

தாழ்ச்சி என்பது உண்மையை காணக்கூடிய ஆற்றலாகும். நான் யார், என் வாழ்வில் நான் பெற்றுள்ள அனைத்தும் எங்கிருந்து வந்துள்ளது, இதை எல்லாம் பெற்றுள்ள நான் செய்ய வேண்டியதென்ன என்ற உண்மைகளை முழுமையாய் உணர்ந்திருத்தலே தாழ்ச்சியாகும். இந்த உண்மை உணர்வு இருந்தால் நான் வெற்றிபெறும் போது ஆழமான மகிழ்வும், தவறும் போது நிதானமான சீர்தூக்கலும் எனக்குள்ளே நிகழும், என்னை மனிதனாக்கும். அதை தான் முதல் வாசகத்தில் தாவீதின் வாழ்வில் நாம் காண்கின்றோம். தனது தவற்றை நாத்தான் சுட்டிக்காட்டும் போது முதலில் அது தன்னை குறித்து தான் சொல்லப்படுகிறது என்று தெரியாமலே கேட்டுக்கொண்டிருக்கும் தாவீது, "நீயே அந்த மனிதன்" என்ற வார்த்தைகளை கேட்டவுடனேயே இவ்வளவு நேரம் தன தவற்றை உணர்த்தியது இறைவன் தான் என்பதை உணர்ந்து அவரிடமே சரணாகின்றார்.  

நம் வாழ்விலும் கூட, இரவோ பகலோ, வெயிலோ மழையோ, புயலோ பூகம்பமோ, வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சோதனையோ, இன்பமோ துன்பமோ, எதுவானாலும் இறைவன் நம்மோடே இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சிறு இடர் வரினும் எல்லாம் முடிந்துவிட்டது போன்று நாம் திணறும் பொது, உண்மையிலே இறைவனின் பிரசன்னத்தை நாம் கேள்விக்குள்ளாக்குகின்றோம். மற்ற நேரங்களில் எல்லாம் பேசிய பேச்சுகள் என்ன, வீசிய சூளுரைகளென்ன... இவையெல்லாம் வீணே. உள்ளம் உடையும் நேரத்தில் தான் உண்மைகள் வெளிப்படும்... நம் உள்ளம் உடையும் அனுபவத்தில் தான் இறைவனோடு நமக்குள்ள உறவு வெளிப்படும்.

புயல் கண்டு திணறும் சீடர்களை போலல்லாமல், தாவீதை போல  உள்ளம் உடைந்தாலும் அதை இறைவனுக்கு சரணாக்குவோம்... உடைந்த உள்ளத்தை இறைவன் ஒருபோதும் ஒதுக்குவதில்லை.


No comments: