Saturday, January 6, 2018

சனவரி 6: ஒளியின் மக்களாய் வாழ

திருக்காட்சி பெருவிழா 2018


உண்மையான ஒளி உலகிற்கு வந்தது, ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவரிடம் வந்தார். அவருக்கு உரியவரோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.அவருக்குரியவர்கள் நாம், ஒளியின் மக்கள் நாம், ஏனெனில் அவரை நாம் கண்டுள்ளோம், அவரை நாம் ஏற்றுள்ளோம்! இதையே என்று கொண்டாடுகின்றோம். இன்று நமக்குள்ளாக நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியும் இதுவே: நாம் அவரை உண்மையிலேயே கண்டுகொண்டுள்ளோமா? அவரை உண்மையிலேயே ஏற்றுக்கொண்டுள்ளோமா? கடவுளின் வெளிப்பாடு இன்றும் தொடர்ந்து நமக்கு வந்த வண்ணமே உள்ளது... இறைவனை உண்மையிலேயே கண்டுகொண்டிருந்தால், அவரது ஒளியை உண்மையிலேயே ஏற்றுக்கொண்டிருந்தால் இன்றும் தன்னையே வெளிப்படுத்தும் இறைவனை நம்மால் கண்டுகொள்ள இயலும். 


பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு அருட்தந்தை ஒருவரை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அழைத்து வரும் பொறுப்பை நாங்கள் இரண்டு சகோதரர்கள் ஏற்றுக்கொண்டிருந்தோம். இது ஏதும் புதியதொரு அனுபவம் இல்லையே...எத்தனை முறை நாம் இதை செய்துள்ளோம். ஆனால் இம்முறை ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால் நாங்கள் இருவருமே மும்பையிலிருந்து  வரும் அந்த குருவானவவரை பார்த்தது இல்லை. எனினும், ஒரு குருவானவரை பார்த்தவுடனேயே கண்டுபிடிக்க முடியாதா  என்ற எண்ணத்தில் கிளம்பிவிட்டோம்... தொடர் வண்டியும் வந்தது... மக்கள் இறங்கினர். இருவரும் இருவேறு திசைகளை நிர்ணயித்ததுக்கொண்டு காத்துக்கொண்டிருந்தோம். அந்த நடைமேடையே ஏறக்குறைய வெறிச்சோடிவிட்டது ஆனால் அந்த குருவானவரை காணவில்லை. எங்களோடு நின்று கொண்டிருந்தவர்களில் ஏறக்குறைய அனைவரும் புறப்பட்டுவிட்டனர். ஓரிருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். எங்களுக்கு கவலையாகிவிட்டது. ஒருவேளை கவனக்குறைவில் தவறவிட்டுவிட்டோமோ என்று குற்ற உணர்வு சற்றே தலைதூக்க ஒரு பெரியவர் எங்கள் அருகில் நின்று கொண்டிருந்தவர் எங்களை பார்த்து கேட்டார்... வெள்ளை வெட்டி, வெள்ளை  அரைக்கை சட்டை முகம் முழுக்க தாடி, கையிலே ஒரு காக்கி நிற கைப்பை... 'தம்பி மும்பையிலிருந்து ஒரு குருவானவருக்கு காத்திருக்கிறீர்களா?' ... அம்மாங்கைய்யா. நான் தான் அது, வாங்க போவோம் என்றார்!

எங்கள் அருகிலேயே நின்று இருந்த அவரை நாங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை...ஏனென்றால், அவர் எப்படி இருப்பார், என்ன அணிந்து இருப்பார், எப்படி பட்ட பை வைத்திருக்க கூடும் என்று எங்களுக்குள்ளாகவே ஒரு எதிர்பார்பை, ஒரு எண்ணத்தை, ஒரு முற்சாய்வை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டு காத்திருந்தோம். எங்கள் எண்ணத்திற்கு ஏற்ப அவர் இல்லை என்பதால் அவரை நாங்கள் தவற விட்டுவிட்டோம்.

இன்றும் இறைவன் நம் அன்றாட வாழ்வில் நம்மை சந்திக்க வந்து கொண்டே தான் இருக்கிறார். பல வேளைகளில் நாம் அவரை கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில் நாம் எதிர்பார்க்காத உருவிலே அவர் வருகிறார்! நம் அயலானில், நாம் ஒரு பொருட்டாகவே கருதாத ஒரு சிலரில், நாம் மதிக்காத நபர்களில், நாம் அன்பு செய்யாத பலரில், நாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட அந்த குறிப்பிட்ட நபர்களில், தேவையில் உழல்பவர்களில், அனைவராலும் கைவிடப்பட்டவர்களில், இறைவன் நம்மை சந்திக்க வந்த வண்ணமே இருக்கிறார். வெறும் நற்கருணையிலும், கோவிலின் முற்றங்களிலும் மட்டுமே தேடினால் அவரை  நாம் உறுதியாக தவறவிட்டுவிடுவோம்.

அவரை கண்டுக்கொள்ள நாம் ஒளியின் மக்களாய் வாழவேண்டும்... வாழ்வோமா?


No comments: