Saturday, January 6, 2018

சனவரி 7: வெளிப்படும் இயேசு

இதோ என் அன்பார்ந்த மகன் 

கிறிஸ்துவின் திருமுழுக்கு பெருவிழா


கிறிஸ்து பிறப்பு காலத்தின் நிறைவாக வருகிறது கிறிஸ்துவின் திருமுழுக்கு பெருவிழா, அதுவே கிறிஸ்து பிறப்பு காலத்தின் உச்சகட்டமும் கூட என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. தன்னவரை தேடி வந்த இறைவன் தன்னையே முழுமையாய் வெளிப்படுத்தும் தருணம் இது. இதோ என் அன்பார்ந்த மகன் என்று ஒலிக்கும் அந்த குரல் உண்மையில் கூறும் செய்தி என்ன தெறியுமா? இதோ நான். இதோ என் அன்பு. இதோ என் உடன்படிக்கையின் அடையாளம். இதோ உங்களுக்கு என் மாபெரும் கொடை - இதோ இயேசு! இங்கு வெளிப்படுவது இயேசு, இறைவனின் மகன் மட்டுமல்ல, இங்கு இறைவனே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்! மண்ணில் வந்து பிறந்த அந்த மாபெரும் கோடை படிப்படியாய் தன்னையே நமக்கு வெளிப்படுத்தி வருவதை இந்நாட்களில் தியானித்து வந்தோம் - முதலில், இடையாருக்கு, பின் கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு, பின் சிமியோன் அன்னாளின் வழியாக சூசைக்கும் மரியன்னைக்கும், இதோ இன்று மக்களனைவருக்கும் தன்னையே வெளிப்படுத்துகிறார் இறைவன்.

வெளிப்படும் இயேசு என்னவாக வெளிப்படுகிறார் என்று உற்று நோக்குவோம். வல்லமையாகவா? பேரரசராகவா? தீண்டமுடியாத நெருப்பாகவா? அல்லது தொடமுடியாத ஆற்றலாகவா? இல்லை - கொடையாக, இறைவனின் கொடையாக, அன்பாக, உடன்படிக்கையின் அடையாளமாக, இறைவனின் அன்பார்ந்தவராக, நம்மவராக, நமக்கானவராக!

இறைவனின் அன்பாக வெளிப்படும் இயேசு, நம்மை அன்பாக மாற அழைக்கிறார். நேற்று பேசிய திருத்தந்தை ஆழமானதொரு கருத்தை பகிர்ந்துள்ளார்: கிறிஸ்த்து ப்ரிரப்பு விழா முடிந்து விட்டது என்று நினைத்துவிட வேண்டாம்- அது வாழ்நாளெல்லாம் தொடர வேண்டியுள்ளது. நாம் ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள அன்பிலே, நாம் ஆதரவற்றவர்கள் மீது காட்டுகின்ற அன்பிலே அது தொடர்ந்திட வேண்டும். இறைவனின் அன்பாம் கிறிஸ்துவின் வெளிப்பாடுகளை நாம் மாற நமக்கு தரப்படும் அழைப்பு இது.

இறைவனின் உடன்படிக்கையின் அடையாளமாய் வெளிப்படும் இயேசு, அந்த உடன்படிக்கைக்கு ஏற்றவர்களாய் வாழ நம்மை அழைக்கின்றார். உடன்படிக்கை என்பது வெறும் ஒப்பந்தம் அல்ல. வெறும் கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் தாண்டி அது அழியா உறவின் அடையாளம். இறைவனோடு நமக்குள்ள உறவு என்றுமே அழியாது, அது நம்மால் அல்ல ஆனால் என்றும் மாறாத இறைவனால்! என்றும் மாறாத அவர் நாம் இவ்வுறவை உணர வேண்டும் அதற்கு ஏற்றவர்களாய் மாறவேண்டும் என்று நம்மை அழைக்கிறார். அதன் ஆழமான அடையாளமே கிறிஸ்துவின் வருகையும், அவரது மரணமும் அவரது உயிர்ப்புமாகும். எதையும் எதிர்பாராத உண்மையுள்ள உறவில் நாம் வளர்வோமா?

இறைவனின் அன்பார்ந்தவராற் வெளிப்படும் இயேசு, நம்மையும் அன்பார்ந்தவர்களாய் உணர அழைக்கிறார். நமது திருமுழுக்கிலே இறைவன் இதே வார்த்தைகளை நம்மை குறித்தும் கூறினார் என்பதை நாம் உணரவேண்டும்: இதோ என் அன்பார்ந்த மகன், மகள் என்று இறைவன் அன்று நம்மை தேர்ந்துக்கொண்டார். அவ்வார்த்தைகளுக்கு உரியவர்களாய் அவ்வுணர்வை உள்வாங்கியவராகளாய் நாம் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்று இறைவன் ஆசிக்கிறார். 

வெளிப்படும் இயேசுவின் விருப்பம் அறிந்தவர்களாய் அவரது உறவில் சகோதர சகோதரிகளாய் தெரிந்துக்கொள்ளப் பட்டவர்களாய், ஒவ்வொரு நாளும் வாழ முனைவோம். கிறிஸ்துவை போன்றே அந்த பொன்னான வார்த்தைகளை கேட்போம்: இதோ என் அன்பார்ந்த மகன், அன்பார்ந்த மகள் - இவரில் நான் பூரிப்படைகிறேன்.

No comments: