Thursday, March 15, 2018

மார்ச் 16: உன் உண்மை அடையாளம் என்ன?

அச்சுறுத்தும் உலகில் அடையாளம் தேடி... 


ஒருவரை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு பெரிய காரணம் எதுவும் தேவையில்லை, அவர்கள் வேறுபட்டவர்களாய் இருந்தாலே இன்றைய உலகு அவர்களை இல்லாமலாக்கிவிடும்! அடுத்தவரை இல்லாமலாக்குவது, தன்னிடமிருந்து வேறுபட்டவர்களை ஒழித்தே விடுவது... இதுபோன்ற கருத்தியலும் நிகழ்வுகளும் நமக்கொன்றும் புதிதல்ல. சிறப்பாக இன்றைய கால கட்டத்திலே மக்கள் அறியாமையாலும் அழிக்கும் எண்ணங்களாலும் ஆளப்பட்டு வருகிறார்கள். 

உண்மையை ஆய்ந்து அறியாது நுனிப்புல் மேய்கின்றவர்களும், உணர்ச்சிமிகுதியால் உண்மையை காண மறுக்கின்றவர்களும், இதையே சாதகமாக பயன்படுத்தி அழிவையும் அநீதியையும் பரப்பும் இழிசென்மங்களும் இன்று அதிகரித்துவிட்டன. இந்த ஒரு சூழலில் கிறிஸ்துவின் சீடனாய் சீடத்தியாய் வாழும் வழி என்ன என்று சிந்திக்க அழைக்கிறது இன்றைய வார்த்தை. 

என் உண்மை அடையாளம் என்ன? அடுத்தவரை ஏய்த்து பிழைப்பதா? அடுத்தவரை அழித்து வளர்வதா? அடுத்தவரின் நலனுக்காக என் உயிரையும் தருவதா? இதில் எது கிறிஸ்துவின் அடையாளம் என்று நாம் அறிந்ததே! 

தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை கிறிஸ்து தெளிவாக உணர்ந்துவிட்டார். எங்கு சென்றாலும் தன்னை எதிர்க்கும் கூட்டம், தன்னை அழிக்க வகைத்தேடும் வஞ்சகர்கள் சுற்றி இருப்பதை அவர் உணராமல் இல்லை. ஆனால் அவரது வாழ்வோ வார்த்தையோ எந்த மாற்றமும் அடையவில்லை. ஏனெனில் ஆள்பார்த்து, நேரம்பார்த்து, சூழல் பார்த்து உண்மையை திரித்து பேசும் குணம் அவரிடம் துளியுமில்லை - காரணம், தான் யார், எதற்காக வந்துள்ளேன், எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்ற அடையாளத்தில் அவர் தெளிவாய் இருந்தார். 


நம் துன்பங்களிலும், சோதனைகளிலும், ஒவ்வாத சூழல்களிலும், நமக்கு உதவக் கூடியது அந்த அடையாளம் குறித்த தெளிவு மட்டுமே! நான் கடவுளின் மகன், மகள், நான் கிறிஸ்துவின் சீடன், சீடத்தி என்பதை நான் என் அடையாளமாய் கொண்டிருந்தேன் எனின் என்னை யாரும் எதிர்கொள்ள முடியாது. உண்மைக்காக நின்றாலே அச்சுறுத்தும் இன்றைய உலகில் நமது அடையாளத்தை தெளிவாய் உணர்வோம், துணிவாய் பயணிப்போம். 

No comments: