Monday, March 19, 2018

மார்ச் 20: அவரை உயர்த்திட ...

நம் வாழ்வால் அவர் பெயரை உயர்ந்திடுவோம்!

அன்று கிறிஸ்துவை அழித்திட நினைத்தவர்கள் உண்மையிலேயே அவரை உயர்த்திக்கொண்டிருந்தார்கள் -மனுமகன் உயர்த்தப்பட்டபின் அனைவரையும் தம்மிடம் ஈர்த்துக்கொள்வார் என்னும் அவரது கூற்றின் படியே, அந்த சிலுவைச்சாவு அன்று ஒரு முடிவாக அமையவில்லை, தொடக்கமாக, புது அனுபவத்தின் தொடக்கமாக, புது சமுதாயத்தின் தொடக்கமாக, காலம் காலமாக இறைவன் அறிவித்துவந்த மீட்பின் தொடக்கமாக அமைந்தது என்பது நாம் அறிந்தது, நாம் நம்புவது. இது எப்படி சாத்தியமானது: கிறிஸ்துவே அதை இன்று விளக்குகிறார். நானாக எதையும் செய்வதில்லை, என்னை அனுப்பினவர் நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாரோ அதையே நான் செய்கிறேன். இதுவே நம் மீட்பின் ஊற்று. இன்றும் இதுவே நம் மீட்பின் பிறப்பிடம்.

நாம் நமது விருப்பு வெறுப்புகளை சற்றே ஒதுக்கிவைத்து இறைவனின் விருப்பத்தை, அவரது சித்தத்தை செய்ய முழுமுனைப்போடு இறங்கும்போது நாம் அவரையே உயர்த்துகிறோம் என்று உணர்ந்துகொள்வோம். இன்று இறைவனின் பணியை எளியோருக்கு செய்யும் போது ஏற்படும் இடர்களை நாம் அறிவோம். இந்த சூழல்களுக்கு அதை உருவாக்கும் மூடர்களுக்கோ நாம் அஞ்ச தேவை இல்லை... இறைவனின் சித்தத்தை தொடர்ந்து செய்வோம்! நம் விருப்பத்தை அல்ல, நம் திட்டங்களை அல்ல. இறைவனின் சித்தத்தை, இறைவனின் திட்டத்தை தொடர்ந்து செய்வோம். அன்று சிலுவையை முடிவாக நினைத்தவர்கள் போலவே, இறைவன் உயர்த்தப்படுவதை இவ்வுலகம் காணும், அதற்கு நாம் கருவியாய் இருப்பின் இறைவனுக்கு நன்றி கூறுவோம்! 


எப்பெயருக்கும் மேலான பெயரை இறைவன் நமக்கு வழங்கியுள்ளார். கிறிஸ்து என்னும் அந்த பெயரிலும் அந்த வாழ்விலும், அந்த படிப்பினைகளிலும் தான் நமது உண்மையான உயர்வு உண்டு என்று உறுதியாய் நம்புவோம், அவர் சொல் கேட்போம், அவர் வழி செல்வோம், அவர் வாழ்வை வாழ்வோம், அவரையே உயர்ந்திடுவோம்!


No comments: