Tuesday, March 20, 2018

மார்ச் 21: உண்மை - விடுதலையின் வித்து!

விடுதலை வேண்டுமா... உண்மையை உணர்ந்திடு! 

இன்றைய இறைவார்த்தை மூன்று வகையான நபர்களை நம் கண்முன்னே நிறுத்துகிறது. ஒன்று, தங்களுக்கு பிடிக்கவில்லை, தங்களிடமிருந்து வேறுபட்டவர்களாக இருந்தார்கள், தாங்கள் நினைத்ததை செய்யவில்லை என்ற காரணத்திற்காகவே அந்த மூன்று இளைஞர்களை அரசரிடம் சிக்கவைக்க துடித்த அரசவை உறுப்பினர்கள். மற்றும், அவர்கள் சொன்ன காரணத்திற்காக இம்மூவரையும் எரியும் தீச்சூளையில் இட்டுவிட்டு பின் அவர் மேல் எந்த தவறும் இல்லாததுபோல் காட்டிக்கொள்ளும் அரசன். மூன்றாவதாக எரிச்சூளையில் சாகவும் தயாராய் இருந்த மூன்று இளைஞர்கள். இவர்களில் யார் உண்மையில் விடுதலை பெற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

பொறாமை என்னும் வலையினுள் சிக்கி, பொய்யிலும் அடுத்தவரை அழிக்க வேண்டும் என்ற பகைமை உணர்விலும் கருகிக்கொண்டிருந்த அந்த கல்தேயர்களா?

இம்மூன்று இளைஞர்களோடு தனக்கிருந்த நல்ல அனுபவங்களையெல்லாம் மறந்துவிட்டு, தான் என்ற அகந்தையாலும், அடுத்தவரின் சூழ்ச்சியை காணயியலாததாலும், உண்மையை உண்மையிலேயே உணராததாலும், அவர்களை எரியும் தீச்சூளையில் போடத்துணிந்துவிட்டு மற்றவரை குற்றம் சொல்ல எண்ணிய அந்த மன்னரா?

அல்லது எதை பற்றியும் கவலையின்றி, தங்கள் உயிரை பற்றி கூட கவலையின்றி, இறைவனுக்கு மட்டுமே பணிவிடை செய்வோம் என்று எண்ணி வெளியிலும் சரி எரியும் தீச்சூளையினுள்ளும் சரி ஒரே மனநிலையோடு இருந்த அந்த இளைஞர்களா?

இவ்விளைஞர்களே ஆழமான விடுதலையுணர்வு பெற்றிருந்தனர் ஏனெனில் அவர்கள் உண்மையை உணர்ந்திருந்தனர். உண்மை அவர்களை விடுதலையாக்கியது. உடலையும் உயிரையும் கொடுத்த இறைவனைக் காட்டிலும் யாருக்கு பயந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள போகிறோம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டனர். இறைவன் மட்டுமே நிலையானவர், இறைவனே நிலையான உண்மை, உண்மையிருக்கும் இடத்திலே இறைவன் உறைகிறார் என்பதை நாம் உணர்ந்துவிட்டால் விடுதலையுணர்வு நம்மில் நிலைகொண்டுவிடும்.

உண்மையற்ற தன்மையால் கண்டவர் காலிலும் விழ தயாராய் இருக்கும் மனிதர்கள் மத்தியில், உண்மையை சற்றும் அறியாது மூடர்களாய் சுயநலம் போற்றும் மனிதர்கள் மத்தியில், யாருக்கு துணைபோகின்றோம் என்றே தெரியாமல் மதிகெட்டு வாழும் பலர் இருக்கும் காலச்சூழலில் .... உண்மையை உணர்ந்தவர்களாக, உண்மைக்கு மட்டுமே தலைவணங்குபவர்களாய் விடுதலையுணர்வோடு வாழ இறைவன் நம்மை அழைக்கின்றார்... தயாரா?

No comments: