Sunday, March 4, 2018

மார்ச் 5: விளிம்புகளை தேடிச்செல்வோம்

விளிம்புகளற்ற மனிதமே இறையாட்சி!

விளிம்புகளை தேடிச்செல்வோம் - இதுவே திருத்தந்தை பிரான்சிஸ் திருச்சபைக்கு அளித்த முதல் அறிவுரை என்பது நமக்கு நினைவிருக்கலாம். இவ்வழைப்பிற்கான காரணமென்ன, நீங்கள் சிந்தித்ததுண்டா? பலமுறை இந்த சிந்தனை என் மனதை துளைத்ததுண்டு. இன்றைய இறைவார்த்தை அதற்கான ஒரு தீர்வை நமக்கு அளிப்பதாகவே நான் காண்கிறேன். 

நாம் விளிம்புகளை தேடிச்செல்லவேண்டும் ஏனெனில் இவ்வுலகை படைத்த இறைவனை பொறுத்தவரை விளிம்புகள் என்பதே இல்லை. நாம் தான் அவற்றை ஏற்படுத்தி வைத்துள்ளோம். இறைவனை பொறுத்தவரை அனைவருமே மையத்தில் தான் உள்ளோம்; அவரது உள்ளத்தின் ஆழத்தில் தான் உள்ளோம். எல்லா இடங்களும் அவரது இருத்தலால் நிறைந்தே உள்ளது. எல்லா நிகழ்வுகளும் அவரது இருத்தலிலேயே நடக்கிறது. அப்படி இருக்க விளிம்புகள் ஏது? 

அந்நியர்கள் என்றும், வேற்றினத்தார் என்றும், நம்மை சாராதவர்கள் என்றும் நாம் தான் பிரித்து வைத்துள்ளோமே தவிர இறைவனின் திருமுன்னே ஒவ்வொரு மனிதரும் இறைவனின் பிள்ளையே, மானுடத்தின் மையமே! அது சாரிபாத்தின் கைம்பெண்ணாக இருக்கட்டும் அல்லது சிரியா நாட்டின் நாமானாக இருக்கட்டும்... யாராகிலும் அவர் இறைவனின் பார்வையில் மையமாகவே தென்பட்டார் என்பது தான் உண்மை.  விளிம்பு என்று நாமாக ஒதுக்கி வைத்துள்ள நிலைகளை தேடிச்செல்ல நாம் அழைக்கப்படுகிறோம். அவற்றை அகற்ற... விளிம்புகளை ஏற்படுத்தும் மனநிலையை அகற்ற, விளிம்பு நிலை மக்களை உருவாக்கும் அமைப்புகளை அகற்ற, விளிம்பு நிலை சமுதாயத்தை உருவாக்கும் அரசியல் பொருளாதார போக்குகளை அகற்ற...ஏனெனில் விளிம்புகளற்ற மனிதமே இறையாட்சியின் சமூகமாகும்.


யாருமற்றவர்கள் என்று தங்களையே கருதிக்கொள்வோரை, தன்மதிப்பற்ற வாழ்க்கைக்கு தள்ளப்பட்டோரை, இறைவனின் உண்மை அன்பை சுவைக்க மறந்தோரை, வாழ்க்கையின் உண்மை பொருளை உணர இயலாதோரை தேடிச்செல்வோம்... விளிம்புகளற்ற மனிதம் படைப்போம்.



No comments: