Friday, April 13, 2018

ஏப்ரல் 14: புயல் நடுவே ஒரு குரல்

நான் தான் அஞ்சாதீர்கள்! 

உயிர்த்த கிறிஸ்துவின் செய்தி ஏற்று சில காலத்திற்குள்ளாக ஒரு குழப்பம்... கிரேக்கர்கள் மதியிலுருந்து ஒரு குமுறல் எபிரேயர்களுக்கு எதிராக... உரிமைகள், தேவைகள், எங்கள் மக்கள், மற்றவர்கள்... என தொடக்க காலமுதலே திருச்சபையில் குழப்பங்கள் இருந்தேவருகின்றன. ஆனால் அதை அப்போஸ்தலர்கள் எதிர்கொண்ட விதம் தான் நம்மை வியக்க வைக்கிறன்றது! எந்த சலனமுமின்றி, நிதானமாய், சரியான கண்ணோட்டத்தோடு, ஒளிவு மறைவின்றி, சார்பு நிலைப்பாடுகளின்றி, உண்மையை உண்மையாய் எதிர்கொள்ளும் பாங்கு நமக்கு பல பாடங்களை கற்பிக்கின்றன. 

புயலும் இருளும் ஒன்றாய் வந்து மிரட்டும் சூழலில், இறந்துவிடுவோமா என்ற கலக்கத்தின் மத்தியில், எதோ ஒரு உருவம் அவர்களை தொடர்வதை கண்டு மிரளுகின்றனர் அப்போஸ்தலர்கள்... அஞ்சாதீர்கள்... நான் தான் என்று உயிர்த்த கிறிஸ்துவின் குரல் கேட்க, சாந்தமாய் கரைசேருகின்றனர்! இது அவர்களுக்கு ஒரு பாடமாய் அமைந்தது, பிற்காலத்தில் எழும் குழப்பங்களை எப்படி சந்திக்கவேண்டும் என்பதற்கு. 

நமக்கும் இது ஒரு பாடமே! குழப்பங்கள், கவலைகள், கேள்விகள், வேள்விகள் எத்தனை வந்தாலும், உயிர்த்த என் இறைவன் என்னோடு உள்ளார் என்பதை நான் ஆழமாக உணரும் போது எனக்குள் தோன்றும் அமைதியும், சாந்தமும் என்னை கரைசேர்த்துவிடும் என்பதே அப்பாடம். உண்மையில் உயிர்த்த கிறிஸ்துவின் மக்களென்றால், நம் வாழ்வில் வீசும் புயலின் மத்தியில் ஒரு குரல் நமக்கு கேட்க வேண்டும்; கேட்கும்! 

அஞ்சாதே... நான் தான். உன்னோடே இருக்கிறேன். அமைதியாய் எதிர்கொள், கரைகாணும் நேரம் வெகு தொலைவில் இல்லை!


No comments: