Friday, April 27, 2018

ஏப்ரல் 28: அவரது மக்களாக சில வழிகள்

6. ஆவியில் மகிழ்ந்திருங்கள் 

சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள், என்று இன்றைய முதல் வாசகம் முடிகிறது. இந்த முடிவுக்கும், வாசகத்தில் நாம் படிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல தோன்றும், ஏனெனில் வாசகம் முழுவதும் சீடர்கள் எவ்வாறு நிராகரிக்கப்பட்டார்கள் என்பதையே படிக்கிறோம்... ஆனால் அத்தனை புறக்கணிப்புக்களுக்கு பிறகும், அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள் என்கிறது இறைவார்த்தை.  வேறொரு இடத்திலும் கூட, அவர்கள் கிறிஸ்துவுக்காக துன்புறுவதில் மகிழ்ச்சியுற்றார்கள் என்று நாம் படிக்கிறோம் (தி.ப. 5:41)

உண்மையில் இதற்கு பொருள் கொள்ள வேண்டுமென்றால்  இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: என்னில் நம்பிக்கை கொள்பவன் என்னை காட்டிலும் அறிய செயல்கள் செய்வான்! தங்கள் குருவை முழுமையாய் பின்தொடரும் சீடர்களை நாம் இங்கு பார்க்கிறோம். அவரை போலவே, நீதிக்காக பசி தாகம் கொண்டவர்களாக வாழவும், உண்மைக்கு சான்று பகர்வதே தங்கள் அழைப்பு என்பதை உணரவும் அவர்கள் தங்கள் ஆசிரியராம் கிறிஸ்துவிடமிருந்தே கற்றுக்கொண்டார்கள். தங்கள் குரு கிறிஸ்துவை போன்றே அவர்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்!

பலமுறை எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் உண்டு - இளைஞர்களோடும் சரி, இளம் துறவிகளோடும் சரி... அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை குறித்து பேசும்போது "உண்மைக்காக நில்லுங்கள், அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்" என்று நான் கூறும்போதெல்லாம்  என்னை பார்த்து ஒரு சிறு புன்னகையோடு அவர்கள் கூறியதுண்டு: 'அதோடு எங்கள் கதை முடிந்துவிடும்' என்று. அவர்களது வெளிப்படையான கருத்தை நான் பாராட்டினாலும் எனக்குள்ளாக ஒரு கேள்வியை கேட்டுக்கொள்வேன்: கால்களில் உள்ள தூசியை தட்டிவிட்டு அடுத்த நல்ல காரியத்தை நோக்கி செல்லும் மாற்றம் நமக்குள் எப்போது வரப்போகிறது ?

No comments: