Sunday, April 29, 2018

ஏப்ரல் 30: நம்மில் வாழும் இறைவன்

உலகம் நம்மிடம் காண விழைவது என்ன?

இன்றிலிருந்து புதியதொரு கருத்தை முன்மொழிகிறார் கிறிஸ்து... நாம் உண்மையில் இறைவனோடு இணைந்தவர்களாய் இருந்தால், இந்த உலகம் நம்மில் காண விழைவது என்ன?

கிறிஸ்துவை ஏற்போருக்கு கிறிஸ்து இன்று வாக்களிக்கும் கொடையாம் தூய ஆவி இறைவனை நம்மில் வாழ செய்கிறார். நாம் இறைவனை தேடி எங்கும் வேறெங்கும் செல்ல வேண்டாம் ஏனெனில் அவர் நமக்குள்ளே வாழ்கிறார்... நம்மில் வாழும் இறைவன் நம் வழியாய் இந்த உலகிற்கு தன்னையே வெளிப்படுத்துகிறார். ஞானத்தின் இறைவன், உண்மையின் இறைவன், வலுவூட்டும் இறைவன், திடமளிக்கும் இறைவனாம் தூய ஆவியார் நம்மில் வாழும் போது நம்மை காண்பவர்கள், இறைவனின் மகிமையை காண்பார்கள். பவுல் பர்னபாஸ் இவர்களில் இன்றைய முதல் வாசகத்தில் மக்கள் கண்டது இதுவே! 

சென்ற வாரம் முழுவதும் கிறிஸ்து தனது சீடர்கள் எப்படி இருப்பார்கள் என்று இதைத்தான் நமக்கு அறிவுறுத்தினார்: என்னில் நம்பிக்கை கொள்பவன் நான் செய்பவற்றை செய்வான், என்னிலும் மேலானவைகளை செய்வான்! நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற தனது திருத்தூது செய்தியிலே திருத்தந்தை பிரான்சிஸ் நாம் அனைவரும் நற்செய்தி அறிவிப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளோம்... ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நற்செய்தியாளர்களாக நாம் மாற வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார். 

ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நற்செய்தியாளர்கள் எப்படி இருப்பார்கள்... தங்கள் குரலை உயர்த்தாமலேயே இறைவனை குறித்து உரக்க பேசுபவர்களாய், ஒரு வார்த்தையும் கூறாமலேயே இறைவனை மற்றவர்களுக்கு விளக்குபவர்களாய், அதை பற்றி சிந்திக்காமலேயே இறைவனை மற்றவர்களுக்கு உணர்த்துபவர்களாய், சுருங்கக்கூறின் தூயஆவியால் நிரப்பப்பட்டு அவர்களில்  வாழும் இறைவனை உலகம் காண செய்பவர்களாய் இருப்பார்கள். 

நம்மில் வாழும் இறைவனை... நம்முள் உணர்வோம், இவ்வுலகம் உணரச்செய்வோம் .

No comments: