Sunday, April 1, 2018

உயிர்ப்பின் அழைப்பு: கலிலேயாவுக்கு திரும்புங்கள்

ஏப்ரல் 2: பாஸ்கா எண்கிழமையில் திங்கள் 

கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த பிறகும் அவரது எதிரிகளால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை. உண்மை எங்கே வெளிவந்துவிடுமோ, திரும்பவும் உயிர் பெற்றுவிடுமோ என்ற தீமையின் அச்சம் அவர்களை ஆட்கொண்டுவிட்டது, பாவம். இயேசுவின் இறந்த உடல் அமைதியாய் கல்லறை தங்கினாலும், அவர்களது உள்ளம் அமைதி பெறவில்லை. அவர்கள் பயந்தது போலவே, உயிர்த்துவிட்டார் என்று கேட்டதும் அவ்வச்சம் இன்னும் அதிகமாகிவிட்டது! எப்படியாவது உண்மையை அடக்கிவிடவேண்டும் என்று துடித்தார்கள்... உண்மையோ அவர்கள் புதைக்க புதைக்க துளிர்த்தெழுந்தது, வேர்க்கொண்டது, தழைத்தும் நின்றுவிட்டது. அந்த வேர்களின் கிளைகள் தான் நாம்!

இந்த உயிர்ப்பின் அனுபவம் நமக்கு தரும் அழைப்பு என்ன? உங்கள் வாழ்வில் தொல்லைகள், துன்பங்கள், மனக்கவலைகள், தோல்விகள், சோதனைகள், வரும்போது நீங்கள் செய்யவேண்டியது என்ன? கலிலேயாவுக்கு திரும்புங்கள், என்கிறார் ஆண்டவர். 

மலையாய் நம்பியிருந்த இயேசு திடீரென அவர்களோடு இல்லை. எத்தனையோ கனவுகளோடு எருசலேம் வந்தனர் அப்போஸ்தலர்கள்...இயேசு புரிந்துகொள்ளப்படுவார், இறையரசு என்று கூறுகிறாரே அதை அமைத்துவிடுவார், ரோமையர்களுக்கு எதிராக, யூதர்களை ஒன்று சேர்த்துவிடுவார் என்றெல்லாம் கோட்டைகள் கட்டி வந்திருந்தனர் அப்போஸ்தலர்கள். ஆனால் அத்தனை கனவும் இரண்டே நாளில் தகர்க்கப்படும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அதிர்ந்து போய் நின்றார்கள் - இயேசு கூறுகிறார்...கலிலேயாவுக்கு திரும்புங்கள்...

கலிலேயா என்பது வெறும் ஒரு ஊர் அல்ல... அது ஒரு அனுபவம்... கிறிஸ்துவோடு, ஒவ்வொரு நாளும் மாபெரும் நிகழ்வுகளை, புதுமைகளை, அதிசயங்களை, அற்புதங்களை கண்ட ஒரு அனுபவம். கலிலேயாவுக்கு திரும்புங்கள் என்பது, உங்கள் வாழ்வில் நடந்த அரும்பெரும் காரியங்களின் நினைவுக்கு திரும்புங்கள்; இறைவன் உங்களுக்காக செய்த மாபெரும் செயல்களின் நினைவுகளை புரட்டுங்கள்... உங்கள் சோதனை வேளையில் உங்களுக்கு புது ஆற்றல் பிறக்கும் என்று இறைவன் கூறுகிறார். 

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்கு தரும் பெரும் பாடம் இது. இறைவன் உயிர்த்துவிட்டார்... இனி அவர் இறப்பதில்லை, நம்மோடே உலகம் முடியும் வரை வாழ போகிறார்...அவரது உடனிருப்பு நம் கவலைகளில், துன்பங்களில் நம்மை  தேற்றும். அந்த நேரங்களில் இறைவனோடு நம் வாழ்வில் நாம் கொண்டிருந்த நல்ல அனுபவங்களை, அவர் செய்த நன்மைகளை திரும்பி பார்க்க வேண்டும் என நம்மை உயிர்ப்பு அழைக்கிறது. 

நினைவுகள் நம்மை கசப்போடும், கோபங்களோடும், மன்னியா எண்ணங்களோடும் வாழச்செய்யலாம். அல்லது அதே நினைவுகள் நம்மை நன்றியோடும், மன்னிப்போடும், சாந்தமான உள்ளத்தோடும், உண்மையான அன்போடும், நேர்மறையான எண்ணங்களோடும், வளர்ச்சிக்குரிய அனுபவங்களோடும் வாழ்வும் செய்யலாம். எந்த நினைவுகளை நாம் தேர்ந்துகொள்ளப் போகிறோம் என்பது நம்மிடமே உள்ளது. நன்மையான எண்ணங்களை தேர்ந்துக்கொள்ளுங்கள், கலிலேயாவுக்கு திரும்புங்கள் என்று உயிர்த்த கிறிஸ்து நம்மை அழைப்பது நமக்கு கேட்கிறதா? 


No comments: