Thursday, April 5, 2018

உயிர்ப்பின் அழைப்பு: ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட, அச்சத்தால் அல்ல!

ஏப்ரல் 6: பாஸ்கா எண்கிழமையில் வெள்ளி 

இயேசுவை கொன்றதோடு தீர்ந்தது தொல்லை என்றிருந்தவர்களுக்கு அவரது உயிர்ப்பின் செய்தி ஒரு அதிர்ச்சியாய் இருந்ததென்றால் அதன் பின் சீடர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் பேரதிர்ச்சியாய் இருந்தது. கிறிஸ்து இதை முன்னறிவித்திருந்தார்...இறையரசு விதைக்கு ஒப்பாகும், அதை விதைத்துவிட்டு விதைப்பவன் காத்திருந்தால் அது முளைத்து, வேர்விட்டு செழித்தோங்கி பறவைக்கூட்டங்களுக்கு இல்லமாகும் என்றார். அவ்வாறே அடங்கியதுபோல் தெரிந்த அந்த குறுகிய காலம் முளைத்து வர எடுத்துக்கொண்ட நேரம் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அது முளைத்து வந்தபோது அவர்களுக்கு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது... முளைத்து வந்தது வெறும் பயிரல்ல புயல் என்பதை வெகு விரைவில் அவர்கள் உணர நேர்ந்தது! உயிர்த்த கிறிஸ்துவின் உடனிருப்பு அவர்களுக்கு உறுதி தந்தது, உயர்த்தி நிறுத்தியது, புதிதாய் உருவாக்கியது!

அவர்களது நம்பிக்கை புதுமைகளோடும், அருங்குறிகளோடும் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் அவர்கள் ஆண்டவரால், உயிர்த்த ஆண்டவரால் ஆட்கொள்ளப் பட்டிருந்தார்கள், அச்சத்தாலும் பயத்தாலும் அல்ல. அவர்களிடம் இருந்த பயமும் நடுக்கமும் காணாமற்போயிற்று! ஏனெனில் அவர்களை ஆண்டவர் ஆட்கொண்டிருந்தார். இது அந்த பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் புரியவில்லை. மற்ற கிளர்ச்சிவாதிகளை போல இவர்களும் அடங்கிவிடுவார்கள் என்று நினைத்தார்கள்...ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன, இன்னும் அடங்கியப்பாடில்லை. 

ஆம் அன்புக்குரியவர்களே... நாம் ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட வேண்டும். உண்மைக்கும், நீதிக்கும், இறையரசிற்கும், மனித மாண்பிற்கும், சமத்துவத்திற்கு, உள்ளார்ந்த அமைதிக்கும் எதிராக உள்ள அனைத்து சக்திகளையும் எதிர்த்து நாம் கிளர்ந்தெழ வேண்டும், ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு. ஆண்டவரிலே இணைந்து இறையரசின் கனவுகளை நாம் நிகழ்வாக்க வேண்டும். 

உயிர்ப்பின் அழைப்பு இதுவே - உயிர்த்த ஆண்டவரால் ஆட்கொள்ளப்படுவோம், அச்சத்தால் அல்ல!


No comments: