Sunday, April 8, 2018

ஏப்ரல் 9: அழைக்கும் இறைவன்

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா 

இவ்வாண்டு இத்திருவிழா மிக தாமதமாக கொண்டாடப்படுகிறது ... காரணம் நமக்கு தெரிந்ததே. மார்ச் 25 அன்று குருத்தோலை ஞாயிறாகிப்போனதால் நாம் இதை இன்று கொண்டாடுகின்றோம்! 

மரியன்னைக்கு மங்களவார்த்தை சொன்ன தினம் என்று நாம் பொருள் கூறும் இந்நாள் மிக அழகானதொரு செய்தியை நம் ஒவ்வொருவருக்குமே தருகிறது! இன்று நம் கண்முன்னே நிறுத்தப்படும் நிகழ்வில் மூன்று நபர்களை நாம் காணலாம்...

1. கடவுளின் தூதர்: நம்பிக்கை!
நம்பிக்கை என்பது, தம்மையே நமக்கு வெளிப்படுத்தும் இறைவனுக்கு நாம் தரும் பதிலாகும். அவ்வாறு தம்மையே நமக்கு கடவுள் வெளிப்படுத்துகின்றார் என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு குறியீடு, இறைத்தூதர்! கடவுள் நம்மோடு இருக்கின்றார், தொடர்ந்து நம்மோடு பேசி வருகின்றார், நம்மை அவரது உடனுழைப்பாளர்களாக கருதுகின்றார் என்று நமக்கு உணர்த்தும் நபர் இவர்.

2. கடவுளின் தாய்: எதிர்நோக்கு 
எதிர்நோக்கு என்பது நம் வாழ்வில் கடவுளின் உடனிருப்பு என்றுமே உண்டு, நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை என்பதே. இறைவனின் தாயாக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாளை பாருங்கள்...சின்னச்சிறு பெண்... பெண்... அதிலும் சிறுமி... உலகம் சிறியது என எதை கருதுகிறது அதையே தன் மாபெரும் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் இறைவன். இந்த இளம்பெண்ணின் ஒரு சிறுச் சொல்லிலே மனிதத்தின் மீட்பு ஒளிந்திருந்தது என்பது எத்தனை எதிர்நோக்கு தரக்கூடியதொரு குறியீடு!

3. கடவுளின் மகன்: அன்பு 
அன்பு... நாம் அன்பு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் ஏனெனில் கடவுள் நம்மை அன்பு செய்துள்ளார், என்பார் யோவான். கடவுளின் அன்பின் மறுக்கமுடியாததொரு அடையாளம், இன்று முன்னறிவிக்கப்படும் இறைவனின் மகன்! இந்த குழந்தை, மனிதம் முழுவதும் ஏங்கி எதிர்பார்க்கும் இந்த மகனே, உலகத்தின் பால் இறைவன் கொண்ட அன்பின் முழுமையான வெளிப்பாடு!

இந்த மூன்று நபர்களின் சங்கமத்திலே தெளிவாய் வெளிப்படும் இறைவனின் செய்தி இதுவே: அழைக்கும் இறைவன் உன்னை இன்று அழைக்கிறார் - உன் பதில் என்ன? அவரது நம்பிக்கையின் கருவியாய், எதிர்நோக்கின் அடையாளமாய், அன்பின் வெளிப்படை இருக்க உன்னை இன்று அழைக்கிறார் இறைவன் - செவி மடுப்பாயா? 


No comments: