Monday, May 14, 2018

மே 15: ஒரே இறைவனின் ஒரே ஆவியானவர்!

அவரை சார்ந்தவர்களாய், அவரால் அனுப்பப் பட்டவர்களாய் 

தி ப. 20: 17-27; யோ 17: 1-11



பவுலடிகளாரும் இயேசுவும் இருவரும் ஒரே மனநிலையோடு இன்று காணப்படுகிறார்கள்... விடைப்பெரும் மனநிலை. பவுலடிகளாருக்கு வரவிருக்கும் துன்பங்கள் தெளிவாய் தெரிந்தது; அவ்வாறே இயேசுவுக்கும் வரவிருக்கும் பாடுகளும் இறப்பும் கண்முன்னே நின்றது! அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றிய உணர்வு இருவருக்கும் நிறைந்திருக்கிறது. தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை தொடர்ந்து வருபவர்களுக்கு வார்த்தளிக்கும் மனநிலையோடே இருவரும் பேசுகின்றனர் - பவுலடிகளார் அவரை தொடர்ந்து வரும் மூப்பர்களிடமும், கிறிஸ்து தன் அப்போஸ்தலர்களிடமும். தொடரவேண்டிய அப்பணியின் ஒற்றுமையை உறுதி செய்பவராக ஒருவரே இருக்கிறார்: தூய ஆவியானவர். நம்மை படைத்து அழைத்து அனுப்பும் ஒரே இறைவனின் ஒரே ஆவியானவர். 

இயேசு கிறிஸ்துவில் காணப்பட்ட அதே ஆவியானவர், கிறிஸ்து தன் அப்போஸ்தலர்களும், பவுலடிகளாருக்கும், பவுலடிகளார் தன்னை தொடர்ந்து வந்த மூப்பர்களுக்கும் அளித்த அதே ஆவியானவர், வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் தரும் அதே ஆவியானவர். இன்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்றுண்டு... நாம் நம்மை அனுப்பினவருடைய சுவடுகளில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமா? என்னை அழைத்து, எனக்கென ஒரு பணி கொடுத்து அதை வாழ்ந்து காட்டி, எனக்கு முன் சென்று, தான் விட்டு சென்ற பணியை நான் நிறைவு செய்வேன் என்று எண்ணில் விசுவாசம்கொண்டு காத்திருக்கும் என் இறைவனாம் கிறிஸ்துவின் பாதையில் தான் நான் சென்றுகொண்டிருக்கிறேனா? அவரது மனநிலையை எண்ணில் உறுதி செய்யும் அவர் ஆவியை எனக்குள் இயக்கம் கொள்ள நான் அனுமதிக்கிறேனா? அவராகவே நான் மாற என்னை உருவாக்கும் அந்த ஆவியை நான் எனக்குள் உணர்கிறேனா?

ஒரே இறைவனின் ஒரே ஆவியை பெற்ற ஒரே இறைமக்கள் நாம்... அவரை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்!

No comments: