Sunday, June 10, 2018

ஜூன் 11: நல்லவர், ஆவிக்குரியவர், நம்பிக்கையில் சிறந்தவர்!

திருத்தூதர் தூய பர்னபா நினைவு

தி. ப. 11: 21b-26, 13:1-3; மத்  5: 1-12

நல்லவர், ஆவிக்குரியவர், நம்பிக்கையில் சிறந்தவர் - கிறிஸ்துவின் சீடரான ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய குணங்கள் இவை. இவற்றையே பர்னபாவின் வாழ்வு நமக்கு எடுத்து கூறுகின்றது. 

1. நல்லவர்: அவர் நல்லவர் என்று இறைவார்த்தை ஒருவரை குறிப்பிடுவது மிக அரிது. வெகு சிலரே இந்த பாராட்டை பெறுகிறார்கள் - மோசே, தாவீது போன்ற பெரும் தலைவர்கள் மட்டுமே பெற்ற அந்த முகவுரையை பர்னபா பெறுவதை நாம் காண்கின்றோம். 

2. ஆவிக்குரியவர்: அவர் ஆவியால் நிரம்பியிருந்தார் என்றும், பன்னிருவருள் ஒருவராக இல்லை எனினும் அவரை அப்போஸ்தலர் என்றே குறிப்பிடுவதற்கான காரணம் இதுவே! மற்ற அப்போஸ்தலர்களை போன்றே இவரும் தூய ஆவியால் நிரப்பப்பட்டவராய் இருந்தார். 

3. நம்பிக்கையின் மாந்தர்: நம்பிக்கை என்பது இறைவனோடு நமக்கு இருக்கும் ஆழ்ந்த உறவாகும். இவருக்கு கிறிஸ்துவோடு இருந்த இணைபிரியா உறவை அந்தியோக்கிய கிறிஸ்தவர்கள் மிக நன்றாய் உணர்ந்திருந்தனர். அவர்களும் அந்த உறவால் உந்தப்பட்டு கிறிஸ்துவில் ஆழமாய் வளர்ந்துவந்தனர். இதனாலேயே அந்தியோகியாவில்தான் முதன் முதலாக இம்மக்களுக்கு கிறிஸ்து-அவர்கள் (கிறிஸ்தவர்கள்) என்ற பெயர் வழங்க பட்டது.

4. இறைவனுக்குரியவர்: சவுலை கிறிஸ்தவ குழுமத்திற்கு அறிமுகப்படுத்தி பவுலாக அடையாளம் காட்டியவரே பர்னபா தான். ஆனால் ஒரு நிலையில் பவுல் இவரை விட புகழும் அறிமுகமும் பெற்றார்... இருப்பினும் பர்னபா எந்த வகையிலும் அவரை ஒரு போட்டியாகவோ பொறாமையோடோ காணவில்லை. இன்றைய கிறிஸ்தவ தலைமைத்துவத்தில் இந்த பண்பு எத்தனை அரிதாகிவிட்டது!

5. கீழ்படிதலுள்ள பணியாளர்: பர்னபா அங்கு தங்கினார், புறப்பட்டு சென்றார்.. என்றெல்லாம் நாம் படிக்கும் போது அவர் அப்போஸ்தலர்களும், திருச்சமூகமும் தனக்கு என்ன பணி அளித்தார்களோ அதை ஒரு பணியாளனாய் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்வதிலே நிகரற்றவராய் திகழ்ந்தார் என்பதை உணர்கின்றோம். 

இத்தகைய நல்லவரும், ஆவிக்குரியவரும், நம்பிக்கையில் சிறந்த பணியாளருமான பர்னபாவுக்காக இறைவனுக்கு நன்றி கூறும் இவ்வேளையில் அவரை போன்றே இறைவனுக்குரியவர்களாய், கிறிஸ்து-அவர்களாய் மாற முயற்சிப்போம். 

No comments: