Friday, June 15, 2018

ஜூன் 16: உங்கள் வாழ்வு பேசட்டும்

வார்த்தை வாழ்வாகும் போது வார்த்தையே வாழ்வாகிறார் 

I அரசர் 19: 19-21; மத் 5: 33-37

ஆணையிடவே வேண்டாம்; ஆம் என்றால் ஆம் என்றும், இல்லையென்றால் இல்லையென்றும் மட்டும் சொல்லுங்கள். இதற்கு மேல் வருவதெல்லாம் தீயோனிடமிருந்தே வருகிறது என்று உணர்ந்துகொள்ளுங்கள். பாதி உண்மைகள், அரைகுறை உண்மைகள், பாதிப் பொய்கள், அளக்கப்பட்ட வார்த்தைகள், சோடிக்கப்பட்ட உண்மைகள்... என்று எத்தனை வகையான தீமைகள் நமது சொற்களில் அடங்கியுள்ளன. உங்கள் சொற்கள் உங்கள் வாழ்க்கையாக வேண்டும் என்று அழைக்கிறார் இறைவன். 

எலிசேயு இன்றைய வாசகத்தில் தனது சொற்களால் பேசாமல் தனது செயலால் பேசுகிறார். தந்து துண்டை அவர் மீது எலியாசு போட்டபோது ஆண்டவருடைய அழைப்பு அவருக்கு தரப்பட்டது. அந்த அழைப்பிற்கு ஆம் என்பதோ இல்லை என்பதோ எலிசேயுவிடமே இருந்தது - நான் என்ன செய்ய வேண்டும் என்று எலியாஸிடம் கேட்கும் போது அவர் தெளிவாக என்னை ஏன் கேட்கிறாய் என்று கூறிவிட்டு நகர்கிறார். அழைத்தது இறைவன் அல்லவா. நமது வாழ்விலும் சூழல்கள் பல வரலாம் என்ன செய்ய வேண்டும் என்று நாம் பலரிடம் கேட்போம் - மறந்துவிட வேண்டாம்... நம்மை அழைப்பது இறைவன். அவருக்கே நாம் பதிலிறுக்க வேண்டும். 

நமது பதில் வெறும் வார்த்தையாக இல்லாமல் வாழ்வாக இருக்க வேண்டும் என்று அழைக்கிறார் கிறிஸ்து. எலிசேயு அதையே செய்கிறார்... தன் அழைப்பிற்கு தனது செயலால் பதிலிறுக்கிறார். தன்னிடமிருந்த இரண்டு காளைகளை வெட்டி பலியிட்டு தன் ஏரினையே விறகாக்கி சமைத்து தன்னை சுற்றியிருந்தவர்களுக்கு விருந்தளித்து அனைத்தையும் துறந்து இறைவனை பின்செல்கிறார். இது வரலாற்றின் ஒரு அறிய நிகழ்வை நமக்கு நினைவூட்டுகிறது. 1519ல் மெக்சிகோ மீது ஸ்பெயின் படையெடுத்தபோது எர்னான் கோர்தேஸ் என்ற ஸ்பெயினின் படை தலைவன் தன வீரர்கள் தாங்கள் வந்த கப்பல்களை எரிக்க கட்டளையிட்டான். செய் அல்லது செத்து மடி என்ற சொல்லாடல் அங்கு பிறந்தது.

இறைவனுக்கு நாம் கூறும் "ஆம்" முழுமையான ஆமாக இருக்க வேண்டும். இறைவனுக்காக, அவரது அரசிற்காக, அவரது சித்தத்திற்காக வாழ நாம் முன் வரவேண்டும். நம் வாழ்வின் பொருள் என்னவென்று நம் வாழ்வே பேசவேண்டும். நமது வார்த்தைகள் வாழ்வாகும் போது வாழ்வான வார்த்தை நம்மோடு வந்து வாழ்வார் என்பதில் எந்த வியப்பும் இல்லை!

No comments: