Monday, October 29, 2018

கிறிஸ்துவில் வாழ்வதே உண்மை வாழ்வு

அக்டோபர் 30, 2018: எபேசியர் 5:21-33; லூக்கா 13: 18-21


ஒருமுறை இளம் தம்பதியினரிடம் திருமண வாழ்வில் தம்பதியர் இடையே இருக்க வேண்டிய நற்குணங்களை பற்றியும் மனநிலைகளை பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இன்றைய முதல் வாசகத்தின் பகுதியை விளக்கியபோது, ஒரு சில சமயங்களில் மிகவும் காரசாரமான விவாதங்கள் எழுந்தன. அதில் ஏற்றுக்கொள்ள கடினமான சிலவற்றை பற்றி பேசும் போது ஒருவர், "இதையெல்லாம் பவுலடிகளார் கூறுவது ஒரு விதத்திலே வினோதமாக இருக்கிறது! அவரே திருமணமாகாதவர் அல்லவா" என்றார். உடனே வேறொருவர், "ஆம் அதை பவுலடிகளார் கூறுவதும் நீங்கள் விளக்குவதும் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது" என்றார். அரங்கம் முழுவதும் சிரிப்பொலியால் நிரம்பிற்று.  

அதை சற்று ஒதுக்கி விட்டு சிந்திப்போம்... பவுலடிகளார் கூறும் கருத்துக்களை முன் நிறுத்தி, யார் யாருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற பெரியதொரு விவாதமே நடத்தலாம். ஆனால் அது அல்ல இங்கு நமது நோக்கம். அடங்கி நடப்பதா, அடங்கிப்போவதா என்பது அல்ல ஆனால் எப்படிப்பட்ட வாழ்வு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்று சிந்திப்பதே இன்றைய வார்த்தையின் உண்மை அழைப்பு.

தலைவராக வாழ்கிறேனா, தொண்டராக வாழ்கிறேனா, திருத்தூதராகவோ ஊழியராகவோ, ஊரறிந்தவராகவோ அல்லது யாருமறியாத எளிமையானவராகவோ.... இவை ஏதும் உண்மையானதன்று. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது எந்நிலையிலும், கிறிஸ்துவுக்குள் வாழ்வதே என்பதை நாம் உணரவேண்டும். கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால், நான் சிறு கடுககாய் இருந்தாலும் போதும் பெரும் மரமாய் ஓங்கிடுவேன்; சிறு அளவு புளிப்பு மாவாய் இருந்தாலும் போதும் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவேன். கிறிஸ்துவுக்குள் நான் வாழ்கிறேனா என்பது மட்டுமே இங்கு உண்மை கேள்வி... இல்லையெனின் அதிகாரம், ஆணவம், அகங்காரம் என்று பலவும் சூழ்ந்து என்னை அழித்து விடும். 

No comments: