Wednesday, October 3, 2018

அமைதி தரும் அமைதி

புனித பிரான்சிஸ்கு அசிசியார் நினைவு 

அக்டோபர் 4, 2018: யோபு 19:21-27; லூக் 10: 1-12

வரலாற்றிலே கிறிஸ்துவை மிக நெருக்கமாய் பிரதிபலித்தவர்களில் முதன்மையான புனிதர் தூய பிரான்சிஸ்கு அசிசியார் என்பார்கள். கிறிஸ்துவின் ஐந்து காயங்களை இவர் பெற்றிருந்த காரணத்தினால் மட்டுமல்ல, மாறாக கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய மாபெரும் கொடையான உண்மையான அமைதியை இவர் தன் வாழ்நாள் முழுதும் உலகிற்கு அறிவுறுத்தியமையாலே. நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும், 'இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக' என்று கூறுங்கள், என்று கிறிஸ்து தன் திருத்தூதர்களிடம் கூறுவதை நாம் இன்றைய நற்செய்தியில் காண்கின்றோம். 

சிறப்பாக அடிப்படைவாதமும் தீவிரவாதமும் கோலோச்சிவரும் இந்த நாட்களிலே, வெறும் அரசியல் அல்லது சமய தீவிரவாதம் அல்ல, ஆனால் எல்லா நிலைகளிலும், தரப்பிலும், சூழலிலும் நாம் காண்கின்ற அடிப்படைவாத  பிரிவினைவாத சுயநலவாத ஆற்றல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அன்று புனித பிரான்சிஸ் பத்தாம் பதினோறாம் நூற்றாண்டில் வந்தபோது இருந்தது போலவே, இன்று திருச்சபை பல சோதனைகளை, சவால்களை, காயங்களை, இடறல்களை, இழுக்குகளை எதிர்கொண்டவண்ணமே இருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? கசப்போடும், பழிவாங்கும் எண்ணத்தோடும், வஞ்சம் தீற்கும் உள்ளத்தோடும் செயல்பட போகிறோமா? அல்லது கிறிஸ்துவை போன்று நம்பிக்கை தரும் ஆழ்ந்த அமைதியில் உண்மையை சந்திக்கப்போகிறோமா? அது நம் கைகளிலேயே உள்ளது என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உலகை, தன் மக்களாகிய நம்மை தேடி வந்த அமைதியாம் இறையேசு தரும் அமைதியை நம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வோம்; அமைதி தரும் அதே அமைதியை உலகோடு பகிர்வோம் , அமைதியின் கருவிகளாவோம்.

No comments: