Tuesday, October 30, 2018

மீட்பிற்கான எளிதான வழி எது?

அக்டோபர் 31, 2018: எபேசியர் 6:1-9; லூக்கா 13: 22-30


அனைவரும் மீட்படைவார்களா? யார் மீட்படைவர், யார் மீட்படையார்? இந்த கேள்விகள் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன என தோன்றுகிறது. கிறிஸ்துவிடமே  இந்த கேள்வியை பலவிதங்களில் சீடர்கள் எழுப்புவதை நாம் நற்செய்தியில் அவ்வப்போது காணுகின்றோம். ஆனால் ஒருமுறை கூட கிறிஸ்து ஆம் இல்லை என்று இதற்கு பதில் சொல்லவில்லை; இவர்கள் மீட்படைவர், இவர்கள் மீட்படையார் என்று சுட்டிக்காட்டவில்லை! மாறாக அவர்களை ஆழ்ந்து சிந்திக்கவும், அகன்று நோக்கவும் தூண்டக்கூடிய ஒரு விளக்கத்தை அவர்களுக்கு தருகிறார். 

ஒருமுறை ஊசியின் காதும் ஒட்டகமும் குறித்து ஒரு உவமையை கூறுகிறார். மற்றொரு முறை மனிதருக்கு இவை முடியாதவையாக இருக்கலாம் ஆனால் கடவுளுக்கு முடியாதது என்று ஏதும் இல்லை என்று கூறுவார். இன்று அதே கேள்விக்கு பதிலளிக்கும் அவர், இந்த குழுவையோ, அந்த சபையையோ, ஏதோவொரு குறிப்பிட்ட நிலையையோ சார்ந்தவர்கள் என்ற ஒரு காரணத்தினாலேயே ஒருவர் மீட்படைந்துவிட இயலாது! யாராக இருப்பினும், எந்த நிலையில் இருப்பினும், அந்நிலையில் அவர்கள் வாழும் வாழ்க்கை முறையை பொறுத்தே ஒருவர் மீட்புக்கு உரியவராகவோ மீட்புக்கு தூரமானவராகவோ உருவாகிறார், வளர்கிறார், என்று தெளிவுபடுத்துகிறார். 

பவுலடிகளார் மீட்பளிக்கும் அந்த வாழ்க்கை முறையை விளக்கும் போது ஒரே ஒரு வழியை நம் கண் முன் நிறுத்துகிறார்: இறைவனுக்கு உகந்ததை, இறைவனின் திருவுளத்தை செய்வது என்பதே அது! மீட்படைய எந்த ஒரு குறுக்கு வழியோ, எளிதான வழியோ இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இருப்பது ஒரு வழியே! இறைவழியே!

இன்று, இந்த நேரம், இந்த சூழலில் இறைவன் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்குள்ளாக தெளிந்து தேர்ந்து நான் செயல்படும்போது, இறைவனுக்குரியவராய், மீட்புக்குரியவராய் நான் வளர்கிறேன்!

No comments: