Tuesday, January 16, 2018

சனவரி 17: இறைவனை தேர்ந்துகொள் நிறைவினை தெரிந்துகொள்

தூய வனத்து அந்தோனியார் - நினைவு நாள் 


உலகின் எல்லா சமயங்களிலும் ஒரு சிந்தனை ஓத்திருக்குமேயானால் அது இதுவே: நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஒரு போர் நடந்தவண்ணமே உள்ளது. இதில் நன்மை வெல்லுமா தீமை வெல்லுமா என்பது ஒரு முக்கியமான கேள்வியே என்றாலும், நான் எதை தேர்ந்துகொள்கின்றேன் என்பது அனைத்தையும் விட முக்கியமான கேள்வியாகும். நம்பிக்கையின் பார்வையில் காணும்போது என் வாழ்வில் ஒவ்வொவரு தருணமும் இரு வேறு தேர்வுகள் என் கண் முன் நின்றுகொண்டே இருக்கின்றன: கடவுளுக்கு உரியதா? கடவுளுக்கு எதிரானதா?

என் சொல் செயல் சிந்தனை இவற்றில் ஏதிலானாலும் சரி, நான் எதை தேர்ந்துகொள்ளுகின்றேனோ அதுவாகவே மாறுகின்றேன். கடவுளுக்கு உரியதை தேர்ந்து கொண்டால்  கடவுளுக்கு உரியவனாகவும், கடவுளுக்கு எதிரானதை தெரிந்துகொண்டால் கடவுளுக்கு எதிரானவனாகவும் என்னையே நான் உருவாக்கிக்கொள்கிறேன். 

நீ வாளோடும் எரிகம்போடும் வருகிறாய் நானோ என் ஆண்டவராம் கடவுளின் பெயரால் வருகிறேன் என்று முரசறைந்து மாவலிமை வாய்ந்த பிலிஸ்தியரின் போர்வீரணை எதிர்கொள்ளும் சிறுவன் தாவீதை பாருங்கள். எங்கிருந்து வந்தது அந்த துணிச்சல் - நான் கடவுளை மட்டுமே நம்பி உள்ளேன் என்ற ஒருமணப்பட்ட நிலையினின்று வருகிறது.

சின்னஞ்சிறு கற்களை தேர்ந்துகொள்ளும் தாவிதாட்டும்,  கை சூம்பியவர், பாவிகள் என சின்னஞ்சிறியோரை தேர்ந்துகொள்ளும் கிறிஸ்துவாகட்டும்...அவர்களது தேர்வு ஒன்றேயொன்றாக இருந்தது - அதுவே கடவுளுக்கு உரியது! 

இன்று நாம் சிறப்பிக்கும் புனிதரின் வாழ்விலும், உண்மையிலேயே இறைவனை தேர்ந்துகொண்ட தருணங்கள் அதிகமாயிருந்தது. தனக்குள்ள பெரும் சொத்தை தனக்கென விட்டு தனது பெற்றோர் இறந்தபோது, தான் என்பது அகந்தை என்றும் தனது என்பது வெறுமை என்றும் உணர்ந்த அந்தோணி தனக்கென விட்டு சென்ற சொத்தை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, நாளையை குறித்த கவலை தனக்கு இருக்க கூடாது என்ற மனநிலையோடு துறவற வாழ்வை தோற்றுவிக்கிறார். 

உண்மையிலேயே இறைவனை முழுமையாக தேர்ந்துகொள்ளும்போது தான் அவரே எனது பாறை, என் மீட்பு, என் அரண், என் ஆற்றல் என்று நாம் கூறும் வார்த்தைகள் உண்மையில் பொருள்படும். 

No comments: