Sunday, February 4, 2018

பிப்ரவரி 5: இறைபிரசன்னத்தை உணர்கிறார்களா?

மக்களை தேடி சென்ற கிறிஸ்து, அவரை தேடி வந்த மக்கள் 


முதல் வாசகத்தில் உடன்படிக்கையின் பெட்டகம் கோவிலை தேடி வருகிறது; நற்செய்தியில் கிறிஸ்து மக்களை தேடி வருகிறார். இவ்விரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா எனின், அதிகம் உண்டு! இறைமக்களே இறைவன் வாழும் முதல் கோவில் என்பதை நாம் உணரவேண்டும் என்பதே அந்த தொடர்பு. நீங்கள் கடவுள் வாழும் கோவில் என்று உங்களுக்கு தெரியாதா என்று பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய மடலில் நம்மை பார்த்து வினவுகிறார் அல்லவா? (1 கொரி 3:16). சிறப்பாக, தேவையில் உழல்வோர், வருத்தத்தில் இருப்போர், துன்பத்தில் திணறுவோர், துணையின்றி வாடுவோர், வழியின்றி திகைப்போர், இவர்கள் எல்லாம் இறைவன் வாழும் ஆலயங்களே. இவர்களில் இறைவனை காண இயலாதவர்கள் இறைவனை எங்குமே காண இயலாது.

கோவிலின் முக்கியத்துவத்தை கிறிஸ்து குறைத்து கூறவில்லை, ஆனால் அதையும் தாண்டி இறைபிரசன்னத்தை உணர நம்மை அழைக்கிறார்: ஒரு நாள் வரும், இறைவனை ஆவியிலும் உண்மையிலும் வழிபடுவீர், என்று நம்மை அழைக்கிறார். பெரிய கோவில்கள் கட்டுவது சிறப்பே, ஆனால் உண்மையில் இறைமக்களை கட்டி எழுப்புவது அதைவிட முக்கியமானதன்றோ? பெரும் விழாக்கள் கொண்டாடுவது தேவையே ஆனால் அதைவிட மக்களை, மனிதர்களை, நம் சகோதர சகோதரிகளை கொண்டாடுவது முக்கியமானதன்றோ! 

பெரும் விழாக்களில் லட்சலட்சமாய் செலவு செய்தபின்னும் ஒருவரின் வாழ்வை கூட தொட இயலவில்லையென்றால், துன்பப்படும் ஒருவரின் உள்ளத்தை கூட உற்சாகமூட்டவில்லையெனில், ஒருவரின் துன்பப்படும் குடும்பத்தை கூட ஒளிபெற செய்யவில்லையெனில், அந்த விழாவை கொண்டாடி என்ன பயன்? 

எங்கெல்லாம் கிறிஸ்து சென்றாரோ அங்கெல்லாம் மக்கள் சென்றார்கள்... இறைபிரசன்னத்தை உணர்ந்தார்கள்; எங்கெல்லாம் சீடர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மக்கள் சென்றார்கள்... இறைபிரசன்னத்தை உணர்ந்தார்கள் ( தி.ப. 5:12-15); நாம் செல்லும் இடமெல்லாம் மற்றவர் வர விரும்புகின்றார்களா? இறைபிரசன்னத்தை உணர்கின்றார்களா? சிந்திப்போமா!!!

No comments: