Monday, March 12, 2018

மார்ச் 13: நீரோடையாய் பயணிக்க... பாய்ந்தோட...

அருளின் நீரோடைகள்  நம்மை சுற்றி பாய்கின்றன! 

உயிரோட்டமுள்ள வாழ்வை குறிக்கும் அழகானதொரு உருவகத்தை நம்முன் வைக்கிறது இன்றைய இறைவார்த்தை: உயிரளிக்கும் நீரோடைகள்! இறைவனின் இல்லத்திலிருந்து பாய்ந்தோடும் நீரோடையை எசேக்கியேலும், அந்த உயிரளிக்கும் நீரோடையே கிறிஸ்துவாய் லூக்காவும் இன்று நம்மை ஆழ்ந்து தியானிக்க அழைக்கிறார்கள்... அருளின் நீரோடைகள் நம்மை சுற்றி பாய்ந்தோடுவதை நாம் உணர்ந்திருக்கிறோமா? 

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் அந்த நீருக்குள் இறங்கவேண்டும் என காத்திருந்தவருக்கு இயேசுவே சென்று நீ நலம் பெற விரும்புகிறாயா என்று கேட்டது, அவர் நீரோடைக்கு செல்வதற்கு பதிலாக நீரோடையே அவரிடம் வந்தது போல் இருந்திருக்கவேண்டும்!  ஆனால் நீரோடை பாய்ந்தோடுவது என்பது எப்போதுமே விரும்பத்தக்க ஒன்றாகவே இருக்கும் என்பது உறுதி அல்ல.  அதனால் தான் கிறிஸ்து அவரிடமே கேட்கிறார்: நீ நலம் பெற விரும்புகிறாயா? 

இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நாம் எண்ணலாம்! ஆனால் இது மிக தேவையான ஒரு கேள்வி தான்... நடக்க இயலாதவராக போவோர் வருவோரின் இரக்கத்திற்கு பாத்திரமாக இருப்பதே நல்லது என்று அம்மனிதன் நினைத்துவிட்டால்? அப்படி படுத்திருந்து பிறரின் ஈகையிலேயே வாழ்க்கை நடத்துவது தொல்லையற்றது என்று அவர் நினைத்துவிட்டால்? ஆகையால் தான் இயேசு அவரிடமே கேட்கிறார்...நீ நலமடைய விரும்புகிறாயா?


நமது வாழ்விலும், இறைவனின் குணமளிக்கும் நீரோடைகள் நம்மை சுற்றி ஓடிய வண்ணமே உள்ளன... அதில் இறங்கவோ, அவற்றினால் குணமடையவோ நாம் விரும்புகிறோமா என்பதே கேள்வி. ஆம் என்றால்... உன் படுக்கையை எடுத்துக்கொண்டு எழுந்து நட என்று அவரிடம் சொன்னதுபோல இறைவன் நம்மிடமும் கூறுவார் - அவர் கூறுவதை செய்ய நாம் தயாரா? நமது பழகிவிட்ட வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த நாம் தயாரா? பிறரின் நிழலிலும், அடுத்தவரின் இரக்கத்திலும்,  பழிபோடுவதிலும், குற்றங்கூறுவதிலும் நமது வாழ்வு கடந்துவிடாமல், ஒவ்வொரு நாளும் புத்துணர்வோடும், புது முடிவுகளோடும், முழுமையை நோக்கி நீரோடையாய் பயணிக்க பாய்ந்தோட நாம் தயாரா? 



No comments: