Wednesday, March 7, 2018

மார்ச் 8: இதயங்கள் கணியட்டும், இறையாட்சி மலரட்டும்

அடுத்தவரின் குரலில் இறைவனின் குரலுக்கு செவிமடுப்போம்  

இன்றைய உலகம் இதயமற்ற உலகமாய் மாறிக்கொண்டே வருகிறது... தன்னலத்தின் உச்சத்தை என்பிக்கும் சில வெளிப்பாடுகளை நாம் கண்டுகொண்டு தான் இருக்கிறோம். யாருடடைய அழிவோ அழுகுரலோ எவ்விதத்திலும் பாதிக்காத நிலையில், தனக்கென்றால் மட்டும் தாண்டவமாடும் தன்னலப்போக்கு தனி மனிதர்களிடமும், சமூக குழுக்களிடமும் ஏன் சில சமயங்களில் திருச்சபைகளிடமும் கூட காணப்படும் போது வியப்பதா நொந்துக்கொள்வதா என்று தெரியவில்லை. 

இன்றைய இறைவார்த்தை நம்மை செவிமடுக்க அழைக்கின்றது... இறைவனின் குரலுக்கு, குற்றமற்ற நிலையிலும் துன்பத்திற்கு உள்ளாவோர் வழியாய் எழும் இறைவனின் குரலுக்கு, உண்மையாலும் உழைப்பாலும் ஓடாய் தேய்ந்தவர்கள் இன்னும் சமுதாயத்தால் சுரண்டப்படும் போது எழும் இறைவனின் குரலுக்கு, எந்த பாவமும் அறியாதவர்கள் அடுத்தவரின் தன்னலத்தாலும் பேயாசையாலும் (எழுத்து பிழையல்ல) நாதியற்று நடுத்தெருவில் நிற்கும் போது எழும் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க அழைக்கின்றது. 

அடுத்தவரின் வலியை உணரவில்லை என்றாலும் அவர்களை ஏளனம் செய்யாமலிருப்போம்; உதவவில்லை என்றாலும் உதாசீனப்படுத்தாமல் இருப்போம்; அநீதிகளை எதிர்த்து கேட்கவில்லை என்றாலும் அவற்றிற்கு துணை போகாமலிருப்போம்... இல்லையேல் இறைவனின் குரலை கேட்க மறுத்தவர்கள் ஆவோம், அவரை புறக்கணித்தவர்கள் ஆவோம், அவரையே ஏளனம் செய்தவர்கள் ஆவோம், அவர் பெயருக்கு களங்கம் விளைவித்தவர்கள் ஆவோம், அவர் கூட்டி சேர்க்க நினைத்ததை சிதறடித்தவர்கள் ஆவோம்!

நம் இதயங்களை கணியச்செய்வோம், நம் சகோதர சகோதரிகளை உண்மையாய் அன்பு செய்வோம்... இறைவனின் குரலுக்கு செவிமடுப்போம். இதயங்கள் கணியட்டும், இறைவனின் ஆட்சி மலரட்டும். 

No comments: