Tuesday, April 10, 2018

ஏப்ரல் 11: தெளிவு மட்டுமல்ல துணிவும் கூட!

உயிர்ப்பின் ஒளி தரும் புதுவாழ்வு!


சிறை, விலங்கு, தண்டனை, கசையடி, மிரட்டல்கள்... இவை எவற்றுக்கும் அஞ்சாத அப்போஸ்த்தலர்களை இந்த நாட்களில் இறைவார்த்தை நமக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. இன்றும் பேதுருவும் ஒரு சில அப்போஸ்தலர்களும் சிறையிலிருந்து அதிசயமாக வெளிவருகிறார்கள்... மீண்டும் பிடிபடுவதற்கே. எனினும் எதற்கும் துணித்தவர்களாய் ஓடி ஒளியாமல் இறைவனின் வார்த்தைக்கு மட்டுமே கட்டுப்பட இசைகிறார்கள். வார்த்தையை அறிவிக்கும் அந்த கடமைக்காக, எதையும் இழக்க அவர்கள் தயாராகும் துணிவு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதே அப்போஸ்தலர்கள் தானே கிறிஸ்துவை மறுதலித்தார்கள், விட்டு ஓடினார்கள், அவரது வாழ்வு முடிந்துபோன கதை என்று கருதினார்கள்? ஆனால் இப்போதோ...

ஆம் மாற்றத்தின் காரணம் - உயிர்த்த கிறிஸ்துவின் ஒளி! உயிர்ப்பின் ஒளி அவர்களுக்கு தெளிவு தந்தது, புது புரிதல் தந்தது, புது வாழ்வு தந்தது, புத்துயிர் தந்தது. உண்மையை கண்டுவிட்டவர்கள் பெறும் ஒளி அது...எதையும் இழக்க தயாராகும் துணிவை தரக்கூடிய ஒளி. 

சாலக்குடியின் டிவைன் தியான மையத்தின் சகோதரர் மாரியோ அவர்களை பற்றி உறுதியாக கேள்விப்பட்டிருப்பீர்கள்... எனக்கு தெரிந்த ஒரு இளைஞன் தனது 25வது வயதிலே கிறிஸ்துவை அறிந்துகொண்டான், நல்ல வருமானம் தந்த தனது பொறியியல் பணியையும் தூக்கியெறிந்துவிட்டு, தன்னை முழுவதுமாக தள்ளி வைத்த தனது குடும்பத்தை சார்ந்தவர்களையும் விட்டுவிட்டு, யாரும் அறியாத ஓரிடத்தில் சென்று குருவானவராக வேண்டும் என தற்போது பயின்றுகொண்டிருக்கிறான்... இந்தியாவிலும், வேறு பிற இடங்களிலும் கிறிஸ்துவில் தங்களது நம்பிக்கைக்காக பல துன்பங்களை சந்தித்துவரும் சகோதர சகோதரிகளை நாம் அறிவோம்... இன்று திருத்தூதர் பணியில் நாம் கேட்கும் சூழலை இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

உண்மையை நான் கண்டுகொண்டேன் என்றால், அதை ஏற்றுக்கொள்ள துணித்துவிட்டேன் என்றால், அதையே என் வாழ்வின் அடித்தளமாய் கொண்டுவாழ நினைத்தேன் என்றால், என்னை யாராலும் தடுக்க முடியாது... ஆனால் அந்த உண்மையை நான் காண, புரிந்துக்கொள்ள, ஒரே வழி தான் உண்டு: உயிர்ப்பின் ஒளியை எனக்குள் நான் கொண்டிருக்க வேண்டும். உயிர்ப்பின் ஒளி தெளிவு மட்டுமல்ல, துணிவும் தரும்!

No comments: