Tuesday, April 3, 2018

உயிர்ப்பின் அழைப்பு: உங்கள் உள்ளங்கள் பற்றி எரியட்டும்

ஏப்ரல் 4: பாஸ்கா எண்கிழமையில் புதன் 

உயிர்த்த கிறிஸ்துவின் உடனிருப்பை அப்போஸ்தலர்களும் சீடர்களும் மட்டுமல்ல, சூழ்ந்திருந்த மக்களும் கூட உணர்ந்தார்கள். அப்போஸ்தலர்களும் சீடர்களும் அவர்கள் உள்ளத்தில் ஒரு நெருப்பு பற்றி எரிவதாய் உணர்ந்தார்கள்... அந்த நெருப்பு அவர்களது உள்ளத்தை ஒளிபெற செய்தது, கதகதப்பூட்டி அவர்களது உறவுகளை புதுப்பித்தது, அவர்களது சொல்லிலும், செயலிலும் துணிச்சலையும் உண்மையையும் ஆழப்படுத்தியது, அவர்களை முற்றிலுமாய் புதுப்பித்தது, அவர்களது வாழ்வுக்கு பொருளளித்து மெருகூட்டியது. ஒருமுறை நாங்கள் வாழ்ந்த இல்லத்திலே துப்புரவு பணியாளர் ஒருவரை நான் கடந்து செல்லும் போது அவர் என்னை பார்த்து புன்னகைத்தவாறே கூறினார்: "நீங்கள் இல்லத்தில் இருக்கிறீர்கள் என்றால் எங்கள் அனைவருக்கும் அது தெரியும்... ஏனெனில் மகிழ்ச்சியும் சிரிப்பொலியும் கண்டிப்பாக இருக்கும்" என்றார். வியந்துபோனேன், இறைவனுக்கு அதிகமாய் நன்றியும் கூறினேன்! 

நாம் உயிர்ப்பின் மக்கள் என்றால் நம்மிலே மகிழ்ச்சியும், உண்மை உறவும், உயிரூட்டும் ஒளியும் மிளிரவேண்டாமா! அப்படியானால் நாம் பிரச்சனைகள் அற்றவர்களாய் இருக்கவேண்டுமா என்ன? இல்லை, இருளின் மத்தியில் ஒளிவீசுபவர்களாய், துன்பங்களின் மத்தியில் பிறருக்கு ஆறுதலளிப்பவர்களாய், பிரச்சனைகளின் மத்தியில் சுற்றியுள்ளோருக்கு திடமளிப்பவர்களாய் நாம் இருக்க வேண்டும் - இதுவே உயிர்ப்பின் அழைப்பு! 

பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில், உறுதியோடும், திடத்தோடும், குறையாத மனத்தெளிவோடும், உறவில் உண்மையோடும், உள்ளத்தில் ஒளியோடும் வாழவேண்டுமானால் நம் மனங்கள் பற்றி எரியவேண்டும்... உயிர்த்த கிறிஸ்துவின் உயிரூட்டும் நெருப்பில் நம் உள்ளங்கள் பற்றியெரிய வேண்டும்.


No comments: