Tuesday, May 22, 2018

மே 23: எளிய மனத்தோர் யார்?

இறைவனில் தஞ்சம் புகுவோர் பேறுபெற்றோர்!

யாக் 4: 13-17; மாற் 9: 38-40

எளிய மனத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களதே (மத 5:3) - இது நாம் அறிந்ததே. ஆனால் எளிய மனத்தோர் என்பவர் யார்?இதையே இன்றைய இறைவார்த்தை நமக்கு தெளிவாய் எடுத்து கூறுகிறது! இறைவனை நம்பி வாழ்வோர், அவரது திருவுளம் நாடுவோர், அவரில் தஞ்சம் புகுவோரே எளிய மனத்தோர், அவர்களே பேறுபெற்றோர் என்கிறது இன்றைய வார்த்தை. 

இம்மனநிலைக்கு எதிரான இரண்டு குணங்களை இறை வார்த்தை சாடுகிறது - ஒன்று, தற்பெருமை, இரண்டு பொறாமை. தற்பெருமை தன்னையே அனைத்திற்கும் மையமாக்கிக்கொள்ளும்; பொறாமை அடுத்தவரோடு என்னை ஒப்பிட்டு மன உளைச்சல் தரும். 

யாக்கோபு இன்று தற்பெருமைக்கு எதிராய் குரல் கொடுக்கிறார். என் வாழ்வு, என் முடிவுகள், என் சாதனைகள் என்று என்னையே நான் மையப்படுத்திக்கொண்டேன் என்றால் அங்கு இறைவனுக்கு இடமேது? எனக்கு தெரிந்த ஒரு நண்பர் - தன் வாழ்வின் அடுத்த 20-25 ஆண்டுகள் என்னென்ன நடக்க வேண்டும், எதை எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று தெளிவாய் தேதிகளோடு எழுதி வைத்துள்ளார்... வாழ்க்கைக்கென ஒரு திட்டம் வைத்திருப்பது சரியே, ஆனால் எல்லாம் என் கையில் தான் இருக்கிறது என்று பிதற்றும் போக்கு சற்று விந்தையானதே! அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை இறைவனையன்றி யாரிவார்? 

கிறிஸ்து தன்  சீடர்களிடம் பொறாமையை குறித்து பேசாமல் பேசுகிறார்... தாங்களே கடவுளின் கொடைகளுக்கெல்லாம் தர்மகர்த்தாக்கள் போன்று எண்ணிக்கொள்ளும் சீடர்களை சற்று நிதானமாய் சிந்திக்க அழைக்கிறார். நம்மில் பலரும் கூட    நாம் பெற்றிருப்பதை குறித்து மகிழ்வதை விட அடுத்தவர் பெற்றிருப்பதை குறித்து அங்கலாய்ப்பதிலே குறியாய் உள்ளோம். உண்மைதானே?

இரண்டு அழைப்புக்கள் இன்று:
1. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்: உங்களுக்கே நீங்கள் தந்துகொள்ளும் தேவையில்லா தண்டனை அது!

2. தற்பெருமை கொள்ளாதீர்கள்: கடவுளை மையப்படுத்துங்கள், அவரை சார்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள், நன்றியுள்ளவர்களாய் மாறுங்கள். 

தற்பெருமை, பொறாமை - இவ்விரண்டு சோதனைகளை நாம் கடந்தால், புனிதத்தை நோக்கிய நமது பயணம் துரிதமடையும்! 


No comments: