Thursday, August 9, 2018

தருதலில் சிறந்த தருதல்

அகமகிழ்வோடு தருபவர்கள் பேறுபெற்றோர்!

ஆகஸ்ட் 10, 2018: : 2கொரி 9: 6-10; யோ 12: 24-26



நேற்று நடந்த ஒரு நிகழ்வோடு தொடங்குகிறேன். நான் செய்யும் தியாகங்களை எல்லாம் நான் அன்பு செய்கின்றவர் புரிந்துகொள்வதே இல்லை என்ற குறையோடு வந்த ஒருவரிடம் நான் பேச நேர்ந்தது...  நான் கூறியது: உண்மை தான், தியாகங்கள் உணரப்படாதபோது ஏற்படும் வலி கொடியதே. ஆனால் மற்றொரு உண்மையும் உண்டு... அன்பு உண்மையானது எனின், நான் செய்வது தியாகங்கள் என்றே எனக்கு தோன்றாது, என்றேன். அந்த நபருக்கு நான் சொன்னது ஏற்றுக்கொள்ள சற்று கடினமானதாக தான் இருந்தது ஆனால், என்னவொரு வியப்பு! நான் பேசிவிட்டு வந்தவுடன் முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த காணொளி பதிவு ஒன்று என் கண்களில் பட்டது. அதன் சாரம் என்னவென்றால், ஓர் அன்னை தன் குழந்தைக்காக செய்யும் எதையும் தியாகம் என்று ஒருபோதும் கருதுவதில்லை ஏனெனில் அவளிடம் இருப்பது உண்மையான அன்பு! 

இன்று நாம் நினைவுக்கூரும் புனித லாரன்சு அவர்களின் சாட்சியமும், இறைவார்த்தை நமக்கு அளிக்கும் பாடமும் இதையே நமக்கு நினைவூட்டுகின்றன. தறுதலில் சிறந்த தருதல், தன்னையே தருதலாகும். தனக்குள்ள நிறைவிலிருந்து தருவது, தனக்குள்ள சிறிதிலிருந்து தருவது, தனக்கே இல்லாவிட்டாலும் துணிந்து தருவது என்ற இவை ஒன்றைவிட ஒன்று சிறந்த வகையான தருதல்களாகும். எனினும் அனைத்து வகை தருதல்களிலும் சிறந்த தருதல், தன்னையே தருதல் என்பதை இறைமகனும் இறைவார்த்தையும் நமக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறுகின்றனர்.

இன்று புனித லாரன்ஸை நாம் நினைவு கூறும் போது தொடக்க கால திருச்சபையில் இந்த படிப்பினை எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இந்த தருதலாலே தான் பலரும் கிறிஸ்துவர்களை கண்டு வியந்தனர், அவர்களை போல வாழவேண்டும் என முடிவெடுத்தனர். புனித ஸ்தேவானாக இருந்தாலும் சரி, புனித பவுலாக இருந்தாலும் சரி, இவர்களுக்கு பிறகு வந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மறைசாட்சிகளாக இருந்தாலும் சரி, இன்றைய புனிதராம் லாரன்ஸாக இருந்தாலும் சரி... இவர்கள் அனைவருமே, அகமகிழ்வோடு தருபவர்கள் பேறுபெற்றோர் என்பதை ஆணித்தரமாய் நம்பினார்கள். தாங்கள் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை யாரிடமிருந்து இவர்கள் கற்றுக்கொண்டார்கள்: தங்கள் ஒப்பில்லா தலைவரும் போதகருமான இறைமகன் கிறிஸ்துவிடமிருந்தே!

அவரே மண்ணில் விழுந்த கோதுமை மணி... தன்னையே மாய்த்து கொண்டு பலநூறு மடங்கு பலனை பிறருக்கு தரும் கோதுமை மணி. இதுவே கிறிஸ்துவின் வாழ்க்கை, கிறிஸ்தவ வாழ்க்கை. நாம் இதை புரிந்து கொள்வது எவ்வளவு அவசியம்! தருவதில் சிறந்த தருதல், தன்னையே தருதலே!


No comments: