Tuesday, October 16, 2018

எனக்குள் நான் யார்?

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் - நினைவு 

அக்டோபர் 17, 2018: கலா 5: 18-25; லூக் 11: 43-46

என்னை மீட்கப்போவது எது? எனது நம்பிக்கையா, எனது செயல்களா? இது என்றுமே இருந்துவந்துள்ள ஒரு விவாதம். இன்றும் உள்ள விவாதம்; என்றும் இருக்க போகின்ற விவாதம். பழைய ஏற்பாட்டு காலத்திலே பழமைவாதம் பேசிய யூதர்களுக்கும் மறுமலர்ச்சி வேண்டிய யூதர்களுக்கும் இடையே; கிறிஸ்துவின் காலத்திலே அவருக்கும் பரிசேயர் சதுசேயர்களுக்கும் இடையே, தொடக்க திருச்சபையில் பவுலடிகளாரின் இறையியலை பின் தொடர்ந்தவர்களுக்கும், யாக்கோபின் இறையியலை பின் தொடர்ந்தவர்களுக்கும் இடையே, இன்று  கத்தோலிக்கர்களுக்கும் பிரிவினை சபையினருக்கும் இடையே, என்று இந்த விவாதம் இல்லாத ஒரு காலகட்டத்தை நம்மால் காண முடியாது. 

இதில் பெரிய குழப்பம் ஏதும் இல்லை: நமது ஒரே உரைக்கல் கிறிஸ்துவே. உங்களது அதிகாரத்தையும் உங்களது முக்கியத்துவத்தையும் முன்னிறுத்துவது எது என்று தேடி அதை ஆதரிக்கும் ஆதிக்க சிந்தனையை கைவிடுங்கள்... மாறாக குழந்தைகளாக, குழந்தை மனம் படைத்தவர்களாக மாறுங்கள், என்று அழைப்பு விடுக்கிறார் கிறிஸ்து. இதுவே நம்பிக்கையின் ஆதாரம். இந்த சின்னஞ்சிறியோருள் ஒருவருக்கு நீங்கள் செய்தவை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று கிறிஸ்து  கூறுவதில்லையா! 

கிறிஸ்துவின் மனம் இதுவே: வெறும் சட்டம், வெற்று சம்பிரதாயம், ஆழமற்ற ஆன்மீகம், மனிதமற்ற மதக்கோட்பாடுகள் இவையெதுவும் உங்களை கடவுளின் பிள்ளைகளாக்க முடியாது! கடவுளின் பிள்ளைகளாகாமல் இறைவனின் மீட்பை நீங்கள் பெற முடியாது.இன்று நாம் நினைவு கூறும் அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார் இதை மிக எளிமையாக கூறுவார்: "நான் வெறுமனே கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட விரும்பவில்லை, அப்படி வாழ நினைக்கிறேன். ஆம், நான் வாழும் வாழ்க்கையை பார்த்து மக்கள் என்னை கிறிஸ்தவன் என்று கூறுவதே முறையாகும்" என்கிறார்.

எப்படி நான் இதை வாழ்ந்து காட்ட முடியும்? தூய ஆவியாரின் கொடைகள் இதனாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் இவை வெறும் சட்ட திட்டங்களோ, செய்ய வேண்டியது செய்ய கூடாதது என்னும் பட்டியலோ,  பாவம் புண்ணியம் என்ற வரையறையோ அல்ல... இவை, கிறிஸ்துவிலும் ஆவியிலும் நான் வாழும் வாழ்க்கையின் வெளிப்பாடு, என் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள சிந்தனைகள் என்ன, அடுத்தவரையும் இந்த உலகத்தையும் நான் நோக்கும் கண்ணோட்டம் எப்படியுள்ளது, சுருங்க கூறின் எனக்குள் உண்மையில் நான் யார் என்பதன் வெளிப்பாடுகளேயாகும்!

No comments: