Tuesday, October 23, 2018

மீட்பளிக்கும் ஊற்றுக்களை கண்டுகொள்வோம்

அக்டோபர் 24, 2018: எபேசியர் 3:2-12; லூக்கா 12:39-48


ஓரிரு வாரங்களுக்கு முன் பரவலாக்கப்பட்ட ஒரு காணொளியை காண நேர்ந்தது. காவி உடுத்திய எல்லாம் அறிந்த ஒரு மேதாவி அதிலே பேசிக்கொண்டிருந்தார், "இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு இன்றைக்கு வருவார் நாளைக்கு வருவார் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள், அவரோ வந்தப்பாடில்லை. அவர் வரமாட்டார். இயேசுவோ, முகமதுவோ, யகோவாவோ,  யாரும் வரப்போவதில்லை!" என்று ஏளனம் பேசிக் கொண்டிருந்தார். இவரை போன்ற அறிவு ஜீவிகளுக்கு எங்கே தெரியப்போகிறது, கிறிஸ்து எங்கிருந்தோ வர வேண்டிய அவசியம் இல்லை... அவர் இங்கு தான் நம் மத்தியிலே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று! எனினும் இவர்களை சொல்லி குற்றமில்லை, இவர்களுக்கு பாடம் எடுப்பவர்களே நம்மவர்கள் தானே! விவிலியத்தை மறைக்கப்பட்ட ரகசியங்கள் அடங்கிய மந்திர புத்தகம் போலவும், தங்கள் விரிவுரைகளெல்லாம் குறி சொல்லும் ஜோதிடங்கள் போலவும், ஜாலங்கள் காட்டிவரும் நம் சகோதர சகோதரிகள் தானே இதையெல்லாம் எடுத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! 

இது போன்றவர்களையே இன்று கிறிஸ்து சாடுகின்றார். இறுதி தீர்வை என்பது எப்போது, எப்படி வந்தால் உனக்கென்ன, உன் வாழ்வின் அழைப்பு என்னவென்று உனக்கு தெரியுமல்லவா? அதன்படி வாழ்வதை தவிர உனக்கு மீட்பளிக்க கூடியது எது? நேரமும் காலமும் அறிவது நமக்கு உரியது அன்று (திருத்தூதர் பணிகள் 1: 7), ஆனால் தூய ஆவியால் உந்தப்பட்டு, நமது வாழ்வில் இறைவன் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை உள்ளார உணர்ந்து அதன்படி வாழ்வதே மீட்புக்குரிய பாதையாகும். 

மீட்பளிக்கும் ஊற்று, வாழ்வளிக்கும் ஊற்று (யோவான் 7:37-39) நமக்குள்ளிருந்தல்லவா பிறப்பெடுக்கின்றன! நம்மை சரியான வழியில் வழிநடத்தும், நமக்குள்ளே உறையும் தூய ஆவியானவரே அது! நமக்குள் இருந்து நம்மை வழிநடத்தும் இந்த மீட்பின் ஊற்றுக்களை கண்டுகொள்வோம்! நிறைவு காண்போம்! 

No comments: